×

ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: “ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். ‘ஒன்றிய அரசு குறைவான நிதி விடுவித்த போதிலும், உரிய காலத்தில் இத்திட்டத்தினை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2,550 கோடியை விடுவித்துள்ளது’ எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வரின் கடிதத்தில் “கிராமப் பகுதிகளிலுள்ள 1.25 கோடி வீடுகளில், 1.12 கோடி வீடுகளுக்கு இணைப்புகளை வழங்கி, ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு பெரும் முன்னேற்றத்தைச் சாதித்துள்ளது.

2024-25 ஆண்டுக்காகத் தமிழ்நாட்டிற்கு ரூ.2,434 கோடி ஒதுக்கப்பட்டபோதிலும் ரூ.732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 2024 செப்டம்பர் முதல் எந்த நிதியையும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறவில்லை.

உரிய காலத்தில் இந்தத் திட்டத்தினை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து 2,550 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.

எனவே ரூ.3,112 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க, தாமதமின்றி மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தலையிட வேண்டும்.

ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒகேனக்கல் (கட்டம்-3) கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு ரூ. 2,283 கோடி வழங்குவதாகக் கூறிவிட்டு, தற்போது வழங்க இயலாது என ஒன்றிய அரசு பின்வாங்குகிறது. இது கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்குவதைப் பாதிக்கும்.

மேலும், சுமார் 7,590 கோடி ரூபாய் செலவில் நாங்கள் கூடுதலாகச் செயல்படுத்திட திட்டமிட்டுள்ள 10 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கும் ஜல் ஜீவன் 2.0 திட்டத்தின்கீழ் நிதி ஒப்பளிப்பு செய்திட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,CM ,Chennai ,Chief Minister ,Modi ,K. Stalin ,EU government ,
× RELATED மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்...