சென்னை : நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1843.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 1843 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசு தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை உருவாக்கிடும் வகையில், நெடுஞ்சாலை துறை வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், மேம்பாடு செய்தல், புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல் ஆகிய பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.
முடிவுற்ற 11 சாலைப் பணிகளை திறந்து வைத்தல்
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 985 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவில் கொங்கணாபுரம் நகருக்கு புறவழிச்சாலை உட்பட 36.395 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட ஓமலூர் சங்ககிரி – திருச்செங்கோடு பரமத்தி சாலை;நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 59 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் 9.15 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட ஓமலூர்-சங்ககிரி-திருசெங்கோடு-பரமத்தி சாலை மற்றும் 65 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் 6.2 கி.மீ நீளத்திற்கு 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக திருச்செங்கோடு நகருக்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலை (கட்டம் -I);கோயம்புத்தூர் மாவட்டத்தில் 250 கோடி ரூபாய் செலவில் 11.8 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக புதியதாக அமைக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் மேற்கு சுற்றுவட்டசாலை மற்றும் 73 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் 8.9 கி.மீ நீளத்திற்கு ஜமீன் ஊத்துக்குளி (மா.சா.எண்.19) மற்றும் ஆச்சிபட்டி (தே.நெ.எண்:83) 200 இணைக்கும் வகையில் 10மீட்டர் அகல இரு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை;
திருவண்ணாமலை மாவட்டத்தில் 90 கோடி ரூபாய் செலவில் 3 கி.மீ நீளத்திற்கு திருவத்திபுரம் புறவழிச்சாலை உட்பட 7.4 கி.மீ நீளத்திற்கும், 59 கோடி ரூபாய் செலவில் 9 கி.மீ நீளத்திற்கும் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிபடுத்தப்பட்ட ஆற்காடு திண்டிவனம் சாலை மற்றும் 50 கோடி ரூபாய் செலவில் 5.6 கி.மீ நீளத்திற்கும் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை;திருப்பூர் மாவட்டத்தில் 87 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் 13.49 கி.மீ நீளத்திற்கும் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிபடுத்தப்பட்ட பழனி – தாராபுரம் சாலை;
திருவாரூர் மாவட்டத்தில் 68 கோடி ரூபாய் செலவில் 5.61 கி.மீ நீளத்திற்கும் (கட்டம்-1, பகுதி-A) மற்றும் 56 கோடி ரூபாய் செலவில் 6.29 கி.மீ நீளத்திற்கும் (கட்டம்-1. பகுதி-B) என இருப்பகுதிகளாக மன்னார்குடி திருமாக்கோட்டை சொக்கணாவூர் சாலை மற்றும் தஞ்சாவூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் கோடியக்கரை சாலையை இணைக்கும் வகையில் இரு வழிச்சாலையாக புதியதாக அமைக்கப்பட்டுள்ள மன்னார்குடி சுற்றுவட்ட சாலை;
என மொத்தம் 1843 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம். இ.ஆ.ப. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் டாக்டர் ஆர். செல்வராஜ். இ.ஆ.ப., தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம், திட்டம்-II மற்றும் சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட இயக்குநர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலை) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திரு.கே.ஜி. சத்தியபிரகாஷ், சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) திரு.ஆர்.சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
