×

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டு நீட்டிப்பு: பதிவாளர் உத்தரவு பிறப்பித்ததாக உயர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022ம் ஆண்டு தேர்தல் நடந்தது. தேர்தலில் தலைவராக நாசர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2025ம் ஆண்டு மார்ச் மாதம் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டுமென்றும், அதுவரை தற்போதைய நிர்வாக குழு மற்றும் செயற்குழு ஆகியவை முடிவுகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் சங்கத்தின் உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி மரியா கிளாட் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்க நிர்வாகிகளின் பதவிகாலத்தை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் நடிகர் சங்கம் தரப்பில் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : South Indian Actors' Association ,Chennai ,Nassar ,
× RELATED புனித தோமையார் மலையில் ரூ.35.45 கோடியில்...