சென்னை: திராவிட மாடலில் உருவான 2 டைடல் பூங்காங்கள் மற்றும் 16 மினி டைடல் பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: திராவிடமாடலில் உருவான 2 டைடல் பூங்காங்கள் மற்றும் 16 மினி டைடல் பூங்காங்கள். கணினி துறையில் தமிழ்நாடு உயர்ந்திட கலைஞரின் தொலைநோக்கு பார்வையில் உருவானவை டைடல் பூங்காக்கள். கடந்த 2016-21 அதிமுக ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஒரே ஒரு டைடல் பூங்காவுக்கு மட்டுமே அடிக்கல் நாட்டினர். நமது திராவிடமாடல் ஆட்சியில், அவர்கள் அடிக்கல் நாட்டிய பட்டாபிராம் டைடல் பூங்காவை விரைந்து முடித்துத் திறந்தது மட்டுமல்ல, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய 7 இடங்களில் சுமார் 4,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் மினி டைடல் பூங்காக்களை நிறுவித் திறந்து வைத்துள்ளோம்.
இதுமட்டுமின்றி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில் சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் டைடல் பூங்காக்களும், திருவண்ணாமலை, ராசிபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 9 இடங்களில் சுமார் 5,400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் மினி டைடல் பூங்காக்களும் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வளர்ச்சியை பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும் – அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம். மாபெரும் தமிழ்க்கனவை சாத்தியப்படுத்துவோம்! வெல்வோம் ஒன்றாக! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
