×

பெட்ரோல் பங்குகளில் அலைமோதிய கூட்டம் திருவண்ணாமலையில் விடிய விடிய பரபரப்பு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்தி பரவியதால்

திருவண்ணாமலை, மார்ச் 13: திருவண்ணாமலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரவியதால் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக, நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் ஒன்றிய அரசால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், கல்லூரி விடுதிகள் தொடர்ந்து செயல்படுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. மேலும், உணவகங்களில் குறிப்பிட்ட வகை உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோல் டீசல் போதுமான கையிருப்பு உள்ளது என அரசு அறிவித்துள்ள நிலையில், திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விலை கடுமையாக உயரும் எனவும் வதந்தி பரவியது.

அதனால், திருவண்ணாமலையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் நூற்றுக்கணக்கானோர் வாகனங்களுடன் திரண்டனர். அதோடு கேன்களில் பெட்ரோல் டீசல் விலை வாங்கிச் செல்லவும் குவிந்தனர். அதனால், பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டது. பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது ஆபத்தை உணராமல் கேன்களில் பெட்ரோல் டீசல் வாங்கி செல்லும் நிலை பல இடங்களில் காணப்பட்டது. அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கூட்டம் அலைமோதியதால் நேற்று பகல் 11 மணியளவில் பெரும்பாலான பங்குகளில் கையிருப்பு காலியானது. எனவே பெட்ரோல் டீசல் இருப்பு இல்லை என எழுதி வைக்கப்பட்டது. அதனால், மேலும் பொதுமக்களிடையே பதற்றம் அதிகரித்தது. பெட்ரோல் பங்குகளில் நிர்ணயித்த விலைக்கு பெட்ரோல் வாங்கிச் சென்ற சிலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் சில இடங்களில் காணப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், ‘திருவண்ணாமலையில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் வழக்கமான அளவில் சப்ளை வந்து கொண்டிருக்கிறது. இதுவரை தட்டுப்பாடு எதுவும் இல்லை. திடீரென பரவிய வதந்தி காரணமாக ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கையிருப்பில் இருந்தது தீர்ந்துவிட்டது. வழக்கம் போல பெட்ரோல் டீசல் டேங்கர் லாரிகள் சப்ளை வந்து கொண்டிருக்கிறது. எனவே பொதுமக்கள் பதட்டம் அடைக்க தேவையில்லை என்றனர்.

இதேபோல் தண்டராம்பட்டு சுற்றுவட்டார பகுதியில் வதந்தி பரவியதால் பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பெட்ரோல் வாங்கிச் சென்றனர். வானாபுரம் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் இல்லாத காரணத்தினால் மூடப்பட்டுள்ளது. செய்யாறில் பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் படையெடுத்து நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய விடிய தங்களது வாகனங்களிலும், கேன்களிலும் டீசல் மற்றும் பெட்ரோல் வாங்கி செல்கின்றனர். போளூர் மற்றும் சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். டூவீலர்கள், கார்கள், வேன்கள், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்தவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்பி சென்றனர்.

சிலர் பெரிய கேன்களுடன் வந்து எரிபொருள் வாங்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. விதிமுறைகளின்படி கேன்களில் எரிபொருள் வழங்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தாலும், மக்கள் அதிக அளவில் திரண்டதால் சில இடங்களில் கேன்களிலும் எரிபொருள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கவலை தெரிவித்தனர். கூட்டம் அதிகரித்ததால் பங்குகளில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Tags : Tiruvannamalai ,US ,-Iran war ,
× RELATED தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை...