×

கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து 4 ஆயிரம் கோழிகள் கருகியது: ₹20 லட்சம் இழப்பு படவேடு அருகே பரபரப்பு

கண்ணமங்கலம், மார்ச் 13: படவேடு அடுத்த வேட்டகிரிபாளையத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன்(40). விவசாயி. இவர் தனது நிலத்தில் 200 அடி நீளம் மற்றும் 100 அடி நீளம் கொண்ட இரண்டு தனித்தனி தகரக் கொட்டகைகளை அமைத்து கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 200 அடி நீளமுள்ள தகரக் கொட்டகையில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீ மளமளவென பரவி கொட்டகை முழுவதும் பரவியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பண்ணை உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் 200 அடி நீள கொட்டகை மற்றும் அதில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 4 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், மேற்கூரை தகர ஷீட்களும் வெப்பத்தில் உருகி சேதமடைந்தன. இந்த விபத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோழிகள் மற்றும் பண்ணை உபகரணங்கள் கருகி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், அருகிலிருந்த 100 அடி நீள ஷெட்டும், அதிலிருந்த கோழிக்குஞ்சுகளும் அதிர்ஷ்டவசமாக தீ பரவாமல் தப்பின.

இச்சம்பவம் குறித்து துரைமுருகன் அளித்த புகாரின் பேரில், சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, வேலூர் தடயவியல் பிரிவு உதவி இயக்குனர் சொக்கநாதன் நேற்று விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த தீ விபத்திற்கு மின் கசிவு காரணமா? அல்லது மர்ம நபர்கள் எவரேனும் கைவரிசை காட்டினார்களா? என்ற கோணத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Padavedu ,Kannamangalam ,Durai Murugan ,Vettagiripalayam ,
× RELATED துணை ராணுவ படையினர் அணிவகுப்பு கீழ்பென்னாத்தூரில் தேர்தலை முன்னிட்டு