×

குழாயில் கசிவை சரி செய்யும் பணி 5 மண்டலங்களில் 8ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு

சென்னை: குடிநீர் பரிமாற்ற குழாயில் கசிவை சரி செய்யும் பணி நடைபெற உள்ளதால் 5 மண்டலங்களில் 8ம்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம் செயயப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வளசரவாக்கம் மண்டலம், போரூர் ஆற்காடு சாலை அருகில் குடிநீர் பரிமாற்ற குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

நாளை (7ம்தேதி) இரவு 11 மணி முதல் 8ம்தேதி இரவு 11 மணி வரை (24 மணி நேரம்) மண்டலம்-9 (தேனாம்பேட்டை), மண்டலம்-10 (கோடம்பாக்கம்), மண்டலம்-11 (வளசரவாக்கம்), மண்டலம்-12 (ஆலந்தூர்), மற்றும் மண்டலம்-13 (அடையாறு)-க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (டயல் பார் வாட்டர்) குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Chennai Water Supply Board ,
× RELATED ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதியம்...