×

இங்கிலாந்து அபார வெற்றி: பந்துவீச்சில் மிரட்டிய ஆர்ச்சர், ஜாக்ஸ்: திணறிய இலங்கை!

கொழும்பு: பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற சூப்பர்-8 சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில், இலங்கையை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இலங்கை பந்துவீச்சாளர்களின் சவாலைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி, 20 ஓவர்களில் வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. சொந்த மண்ணில் விளையாடுவதாலும், இலக்கு குறைவாக இருந்ததாலும் இலங்கை அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இங்கிலாந்தின் பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

இலங்கை அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது. ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோரின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி நிலைகுலைந்தது. குறிப்பாக, 34 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறியது. கேப்டன் ஷனகா மட்டும் ஒரு முனையில் போராடி 24 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இந்த முழு போட்டியிலும் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களே அதிக ஆதிக்கம் செலுத்தினர். ஒட்டுமொத்தமாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 19 விக்கெட்டுகள் சரிந்தன. இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய வில் ஜாக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்குத் துணையாக ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித் மற்றும் லியாம் டாவ்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags : England ,Archer ,Jacks ,Sri Lanka ,Colombo ,Super-8 round ,Pallekele Stadium ,
× RELATED சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்தது...