×

டெல்லி – மீரட் இடையே அதிவேக ‘நமோ பாரத்’ ரயில் தொடக்கம்: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

மீரட்: டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரை இணைக்க 82.15 கிலோமீட்டர் தொலைவிற்கு அதிவேக ரயில் போக்குவரத்து திட்டப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வந்தன. நாட்டின் முதல் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் சில பகுதிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்த நிலையில், மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், இன்று மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நிலையத்தில் ‘நமோ பாரத்’ மற்றும் ‘மீரட் மெட்ரோ’ ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் பிரதமர் அங்கிருந்து மீரட் தெற்கு நிலையம் வரை ரயிலில் பயணம் செய்ததோடு, மொகிதீன்பூர் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘இந்த நவீன வசதி மக்களின் பயண நேரத்தை குறைத்து நாட்டின் வளர்ச்சிக்கு புதிய வேகம் அளிக்கும்’ என்று பேசினார். சுமார் 12,930 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர், புதிய வழித்தடங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் டெல்லியில் 5 கிலோமீட்டர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 21 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய ரயில் பாதைகள் அடங்கும்.

இதன் மூலம் டெல்லி முதல் மீரட் வரையிலான முழு தூரத்தையும் வெறும் 55 முதல் 60 நிமிடங்களுக்குள் கடக்க முடியும். மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் நமோ பாரத் ரயில் நாட்டின் அதிவேக மண்டல ரயிலாக திகழ்கிறது. ஒரே உள்கட்டமைப்பில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மீரட் மெட்ரோ ரயில் 13 நிலையங்கள் வழியாக 23 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 30 நிமிடங்களில் சென்றடையும் வகையில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது.

Tags : Delhi ,Meerut ,PM Modi ,Uttar Pradesh ,
× RELATED எப்படி இருந்த கட்சி இப்படி ஆயிடுச்சு; அதிமுகவைப் பற்றி திருமா வேதனை