×

“மோடியின் தந்தையே வந்தாலும் அவருக்கும் திமுக பயப்படாது” – திமுக இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி உரை

கோவை: கோவையில் இன்று மாலை திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல மாநாடு நடைபெற்றது. எட்டு மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது, கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் ஆகிய பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் இன்று (ஞாயிறு) நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, உரையாற்றினார். அதில் ‘தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதல்வரை தந்தது இளைஞரணிதான். இளைஞரணியின் எழுச்சியை பார்க்கும்போது வெஸ்ட்லயும் திமுகதான் பெஸ்ட் என்பதை காட்டுகிறது.

மக்கள் நலனுக்காக தொடர்ந்து களத்தில் நிற்பது இளைஞரணிதான். ஆட்சி, அரசியல் என இந்தியாவுக்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டியாக இருக்கிறார். இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான ஜனநாயக போரை முதல்வர் தலைமையில் நடத்த பலரும் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது என்றே தெரியாமல் பல கட்சிகள் உள்ளன. எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளன என்பதையே தற்போதுதான் பல கட்சிகள் கணக்கெடுத்து கொண்டிருக்கின்றன.

திமுகவின் ராணுவம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இளைஞரணியை கட்டுப்பாடுடன் நடத்தி வருகிறோம். நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மகளிருக்கு ரூ.5,000 கொடுத்து மகளிருக்கு சர்ப்ரைஸ், அடிமைகளுக்கு ஷாக் கொடுத்துள்ளார் முதலமைச்சர். ரூ.5,000 கிரெடிட் ஆனதும் மக்கள் உடனே வங்கிக்கு சென்று பணத்தை எடுத்துக் கொண்டனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் 1.31 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறார் முதல்வர்.

மக்களிடம் இருந்து பறிக்கும் ஆட்சி பாஜக ஆட்சி, மக்களுக்கு கொடுக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. மகளிர் உரிமைத் தொகை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் நினைத்தனர். திமுக மீண்டும் ஆட்சியமைத்து மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும் என வாக்குறுதி. தேர்தல் வருகிறது என்பதால் மோடி, அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்து இந்தியை திணிக்கப் பார்க்கிறார்கள்.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டத்தையும் ஒன்றிய பாஜக அரசு அறிவிக்கவில்லை. ஒன்றிய பட்ஜெட்டை முழுமையாக படிக்கும் முன்பே அதற்கு பாராட்டு தெரிவித்துவிட்டார் எடப்பாடி.. அரசியலில் முரட்டு பக்தர்கள் பார்த்திருப்போம் ஆனால் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமிதான். 2019ல் அதிமுகவை பாஜகவுக்கு அடகு வைத்த எடப்பாடி 2021ல் அதிமுகவை பாஜகவிடம் குத்தகைக்கு விட்டார். 2026ல் அதிமுகவை பாஜகவுக்கு மொத்தமாக விற்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவை அழிவுப்பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி. எம்ஜிஆர் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமியை பார்த்து கண் கலங்கியிருப்பார். திமுகவினர் EDக்கும் பயப்படமாட்டோம்; மோடிக்கும் பயப்பட மாட்டோம். மோடியின் தந்தையே வந்தாலும் அவருக்கும் திமுக பயப்படாது. திராவிடமாடல் ஆட்சியில் இருக்கும் என்ஜின் வளர்ச்சிக்கானது.

மக்களிடம் வெறுப்பை பரப்பி வெற்றி பெறலாம் என பாஜக முயற்சிக்கிறது. ஜாடிக்கு ஏற்ற மூடி போல, மோடிக்கு ஏற்ற அடிமையாக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார். பாஜகவின் கலவர அரசியலை தமிழ்நாட்டு மக்கள் என்றைக்குமே நுழைய விட மாட்டார்கள். 8 கோடி மக்களின் உரிமைகளை மீட்க நடக்கும் போர் இந்த சட்டமன்ற தேர்தல்” என துணை முதல்வர் உதயநிதி உரையாற்றினார்.

Tags : Modi ,Dimuka ,Deputy ,Udayanidhi ,West Zone ,Goa ,Dimuka Youth Team West Zone Conference ,Tamil Nadu Assembly ,
× RELATED இங்கிலாந்து அபார வெற்றி:...