சென்னை : மாம்பழ சின்னத்தை முடக்குவது குறித்து நாங்கள் முடிவு எடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாமக கட்சியின் உரிமை தொடர்பாக கட்சியின் தலைவர் அன்புமணிக்கும், கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் பாமக. தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நிறுவனர் ராமதாசை தலைவராகவும், அவர் நியமித்த நிர்வாகிகளையும் அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அதுவரை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று, பா.ம.க. சார்பில் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, உள்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, பா.ம.க. சின்னமான மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியான பா.ம.க. உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. மாம்பழம் சின்னம் முடக்கம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என விளக்கமளிக்கப்பட்டது. விசாரணையின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா என கேள்வி எழுப்பினார். இதற்கு ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், தந்தை சொல்வதை மகன் கேட்பது இல்லை என்று பதிலளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் , உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விட்டு உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வதா? எனக் கூறி, நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தனர். மேலும், உள் கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது என்பதால், உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம் எனக் கூறி, இரு வழக்குகளும் விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
