சென்னை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் அவரவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைப்போம் என்று சொன்னீர்கள். அது என்ன ஆயிற்று? அதைச் சொல்லிவிட்டு இதையெல்லாம் சொல்லுங்கள் நன்றாக இருக்கும் என்று பேரவையில் நயினார் நாகேந்திரன் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ம் நிதியாண்டிற்காக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நேற்று நடந்தது.
இந்த விவாதத்தின் போது பாஜ மாநில தலைவரும், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் பேசியதாவது: இது பட்ஜெட்டில் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை. இந்த இடைக்கால பட்ஜெட் போடும்போது அதில் எந்த அரசாங்கம் வேண்டுமானாலும் வரலாம். எதிர்காலத் திட்டங்களைக் குறித்து சொல்ல வேண்டும். இதில் எதிர்காலத் திட்டங்கள் எதுவுமே இல்லை.
அமைச்சர் தங்கம் தென்னரசு: இடைக்கால பட்ஜெட்டிலே கொடுக்கக்கூடிய நிதி, அதற்குப் பிறகு மானியக் கோரிக்கைகளுக்குப் பிறகு ஒவ்வொரு திட்டங்களுக்கு வரக்கூடிய நிதிகள் என்பது மானியக் கோரிக்கையிலே ஒதுக்கப்பட்டு வரும். இடைக்கால பட்ஜெட் என்பது, நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்களின் ஒட்டுமொத்தமான தொகுப்பாக இது அமையும்.
நயினார் நாகேந்திரன்: 1947ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரையிலும், மொத்தக் கடன் தொகை ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் கோடி. வளர்ச்சித் திட்டங்கள் இருந்தாலும் கூட, தற்போது 6.5 லட்சம் கோடி ரூபாய் இந்த 5 ஆண்டுகளில் மட்டும் அரசாங்கம் கடன் வாங்கியிருக்கிறது.
அமைச்சர் எ.வ.வேலு: திமுக பொறுப்பேற்கிறபொழுது, முந்தைய ஆட்சி வாங்கி வைத்திருந்த கடன் ரூ.4.57 லட்சம் கோடி. அதற்கான வட்டி ரூ.37,586 கோடி. கடனுக்கு 5 ஆண்டிற்கு 1.88 லட்சம் கோடி. மொத்தம் அ.தி.மு.க மூலமாக எங்களுக்கு வந்திருக்கிற கடன் ரூ.6,45,000 கோடி. அந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை எல்லாம் பாதியில் போட்டுவிட்டார்கள். பல துறைக்கு கட்டிடம் கட்டுவதற்கான பணம் நாங்கள் செலவு செய்திருக்கிறோம். 11 மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.2349 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 58% கட்டிடங்கள் கட்டுவதற்கு செலவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வாங்கிய கடன்கூட, நீங்கள் அறிவித்திருக்கிற கட்டிடத்திற்கும், அதன் தொடர்ச்சியாக, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் தான்.
நயினார் நாகேந்திரன் : காவிரி-குண்டாறு திட்டம், இதுவரையிலும் அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுபோல், ‘தாமிரபரணி-கருமாணியாறு, அந்தத் திட்டத்திற்கும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
அவைத்தலைவர் அப்பாவு: ரூ.1,060 கோடி நிதியைத் தந்து, பணி முழுவதுமாக முடிவடைந்து, 3,500 கன அடி வீதம் தண்ணீர் எடுத்து, கடைசியாக இருக்கக்கூடிய எம்.எல். தேரிக்கு இந்த ஆண்டு முதலமைச்சர் தண்ணீர் கொடுத்திருக்கிறார். அந்த விவசாய மக்கள் எல்லோரும் தற்போது நன்றியுணர்வோடு இருக்கிறார்கள்.
நயினார் நாகேந்திரன்: உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது விலக்கு அளிக்கப்படுமா?.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இப்போது உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. மத்தியில் நீங்கள்தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். இப்போதாவது நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முன்வருவீர்களா என்ற கேள்வியைத்தான் நான் கேட்க விரும்புகிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.
நயினார் நாகேந்திரன்: கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், பெண்களுக்கெதிரான குற்றங்கள் 50.71 சதவிகிதம் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் ஒரு கருத்து கணிப்பு தெரிவித்திருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களையெல்லாம் ஒப்பிட்டால், பெண்களுக்கு உரிய பாதுகாப்பும், குழந்தைகளுடைய பாதுகாப்பும், தமிழ்நாட்டில்தான் பாதுகாப்பு சிறப்பாக இருக்கின்றது என்று ஒன்றிய அரசு தந்திருக்கக்கூடிய குறிப்பே தெளிவாகத் தந்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆளுகிற மாநிலங்களில்தான் கலவரங்களும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழ்நிலையும் இருக்கிறது என்பதையும் ஆதாரங்களோடு நான் விளக்குவதற்கு தயாராக இருக்கிறேன். அதனை ஏற்றுக்கொள்ள உறுப்பினர் தயாராக இருக்கிறாரா?.
அவைத்தலைவர் அப்பாவு : நான்கு மாதங்களுக்கு முன்பாக இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று ஆளுநர் சொல்லியிருக்கிறார்.
நயினார் நாகேந்திரன்: ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொன்னார்கள். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் வந்த பிறகு தான் கொடுத்தார்கள். இப்பொழுது ரூ.5000 சேர்த்து கொடுத்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது கொடுத்தால், அந்த 28 மாதமும் ஏன் அவர்கள் கொடுக்கவில்லை. அப்போது தேர்தலுக்கு கொடுத்ததாக அர்த்தமாக கொள்ளப்படும், ஒன்று பொங்கலுக்கு ரூ.1000 கொடுத்தார்கள். கடந்த ஆண்டு பொங்கலுக்கு தரவில்லை. அதற்கு முந்தைய ஆண்டும் தரவில்லை. அப்போது தேர்தல் வருகின்றபோது ஒரு சலுகையை கொடுக்கிறார்கள்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி: சென்ற ஆண்டுதான் கொடுக்கவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு கொடுத்தோம். ஆனால், அதேபோல் அதிமுக ஆட்சியில் 2 ஆண்டுகள் பொங்கலுக்கு பணம் கொடுக்கவில்லை. அதே கூட்டணியில் இருப்பதால், அதையும் கேட்டு அவையிலே பேசுங்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் அவரவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைப்போம் என்று சொன்னீர்கள். அது என்ன ஆயிற்று? அதைச் சொல்லிவிட்டு இதையெல்லாம் சொல்லுங்கள் நன்றாக இருக்கும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
* ‘மோடி மஸ்தான்’
நயினார் நாகேந்திரன்: மகளிர் உதவித் தொகை அறிவித்தார்கள். உண்மையிலேயே அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். மேஜிக் வேலை மாதிரி திடீரென்று பார்த்தால் எல்லோருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ‘மோடி மஸ்தான்’ மாதிரி வேலை இருக்கிறதே என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் பிரதமரை தான் சொன்னீர்கள் என எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் ‘மோடி மஸ்தான்’ என்று சொல்லியிருப்பது டிவியில் ஒளிபரப்பாகியிருக்கிறது தவறி சொல்லியிருக்கலாம். ஆனால், ‘மோடி மஸ்தான்’ வேலையை செய்துவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
