×

சிறுசேரி சிப்காட் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் புனரமைத்து அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.2.2026) செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி சிப்காட் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் வரி 30 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு, கரைகளைப் பலப்படுத்தப்பட்டு, புனரமைத்து அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவினை திறந்து வைத்தார்.

இந்தியாவிலேயே பெரிய பொருளாதார வளர்ச்சிமிக்க மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாடு தொழில் துறையானது அனைவருக்கும் பயனளிக்கும் சமச்சீரான வளர்ச்சியை உறுதிசெய்து, பரவலான முதலீடுகளை ஈர்ப்பதில் தனி கவனம் செலுத்திவருகிறது. அந்த வகையில், சிறுசேரி சிப்காட் தகவல் நுட்ப பூங்கா வளாகமானது 782.51 ஏக்கர் பரப்பளவில் 2002-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் தகவல் தொழில்நுட்பப் பூங்கா சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதுடன், சுமார் 14,000 கோடி ரூபாய் முதலீட்டையும் ஈர்த்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நாவலூர் ஏரி வறண்டு போகும் நிலையில் இருந்தபோது, சிப்காட் முழு அளவிலான மாற்றத்தை உருவாக்கிட முன் நின்றது. தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் ஒரு முனைப்புடன், சிப்காட் நிறுவனம் 33.43 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நாவலூர் ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி புனரமைத்தும், பூங்காக்கள். புல்வெளிகளுடன் கூடிய நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் பாதைகளை அமைத்தும், 30 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சுற்றுச்சூழல் பூங்காவானது சுற்றுச்சூழல் அறிவு மையம், சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுப் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சிக் மேற்கொள்வதற்கான வசதிகள், பறவைகள் பார்வை மையம், திறந்தவெளி அரங்கம், நிர்வாக அலுவலகம், உணவகம், குடில்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாதுகாப்பு மற்றும் கழிப்பறை வசதிகள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த முன்னெடுப்பின் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டத்தை மேம்படுத்தியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைத்தன்மையை உறுதிபடுத்தியும், தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் அதனை சார்ந்த பகுதியின் சுற்றுப்புற தோற்றத்தினை செழுமைபடுத்துகிறது. இச்சுற்றுச்சூழல் பூங்கா. தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமையப்பெற்றுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமையப்பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மரு.கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சினேகா, இ.ஆ.ப., சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பிரிதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Siruseri SIPCOT Technology Park ,Chengalpattu ,Tamil Nadu ,SIPCOT Eco-park ,Navalur ,Chengalpattu district ,
× RELATED திருமயத்தில் களைகட்டிய ஜல்லிக்கட்டு; 800 காளைகள் சீறி பாய்ந்தது