×

நெல்லை – திருச்செந்தூர் சாலையில் பல நூற்றாண்டுகளாக பாதயாத்திரை பக்தர்கள் பயன்படுத்திய கல்மண்டபங்கள்: பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் அவலம்

நெல்லை:நெல்லையில் பல நூற்றாண்டுகளாக பாதயாத்திரை பக்தர்களின் பயன்பாட்டில் இருந்த கல்மண்டபங்கள் தற்போது மறக்கப்பட்டு கவனிப்பாரின்றி விடப்பட்டுள்ளதால் பாழடைந்து கிடக்கிறது. முன்னோர்களின் நினவை போற்றும் வகையில் அவற்றை பாதுகாத்திட வேண்டும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘‘அரோகரா’’ முழக்கத்துடன் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். வாகன இரைச்சல்கள் நிறைந்த நெல்லை- திருச்செந்தூர் சாலைக்கு அருகே, 200 ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் எப்படி நடந்திருப்பார்கள்? அவர்கள் எங்கு தங்கி, எதை உண்டு பயணித்தார்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடையை, நெல்லை – திருச்செந்தூர் சாலையில் மவுன சாட்சிகளாக நிற்கும் பழமையான கல் மண்டபங்கள் நமக்குச் சொல்கின்றன. இன்றைய நவீன காலத்தில் கூகுள் மேப் உதவியுடன் பயணிக்கிறோம். ஆனால், எவ்வித வசதியும் இல்லாத அந்தக் காலத்தில், திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்காகவே இந்த கல் மண்டபங்களையும், கோயில் மண்டபங்களையும் நம் முன்னோர்கள் மிகத் திட்டமிட்டுக் கட்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

இதற்குச் சான்றாக, பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள 200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு அமைந்துள்ளது. பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் அருகே உள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில், பிரபல தனியார் பள்ளிக்கு அருகில் ஒரு பழமையான கல் மண்டபம் உள்ளது. இதனை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவி ரமணா மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில், சென்னை கோமளேஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த குமார முனியப்பன் மற்றும் அவரது தாயார் தெய்வானை ஆகியோர், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த மண்டபத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர் என்ற தகவல் 11 அடி உயரத்தில் இருந்த கல்வெட்டில் கண்டறியப்பட்டது.

இதேபோல், நெல்லை மாநகரில் அரசு பல்நோக்கு மருத்துவமனை அருகே ஒரு கல்மண்டபம், ஆழ்வார்திருநகரியில் ஒரு கல்மண்டபமும் இன்றும் உள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது, நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதை ஒரு திட்டமிடப்பட்ட ‘ஆன்மீக நெடுஞ்சாலையாக’ இருந்திருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.நெல்லையில் இருந்து புறப்படும் ஒரு பக்தர், சோர்வடையும் நேரத்தைக் கணக்கிட்டே இந்த மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை, பல்நோக்கு அரசு உயர்மருத்துவமனை அருகே ஒரு கல்மண்டபம், அதைத் தாண்டினால் வி.எம்.சத்திரம், ஆரோக்கியநாதபுரம் அருகே ஒரு கல்மண்டபம், அடுத்து நாயக்கர் காலத் தூண்களைக் கொண்ட கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் பகுதியிலும், அதைத் தொடர்ந்து செய்துங்கநல்லூர், அங்குள்ள சிவன் கோயில், பின்னர் தாமிரபரணி ஆற்றை ஒட்டிய கருங்குளம், அதற்கடுத்து ஆழ்வார்திருநகரியில் ஒரு கல்மண்டபம், அதே பகுதியில் ஆதிநாதப் பெருமாள் கோயில் எனச் சீரான இடைவெளியில் சுமார் 3 முதல் 5 கி.மீ. தூரத்தில் இந்தக் கல் மண்டபங்களும், கோயில்களும் அமைந்துள்ளன.

இன்றைய ஓட்டல்கள் இல்லாத அந்தக் காலத்தில், பக்தர்கள் புளியோதரை, தயிர்சாதம் போன்ற ‘கட்டுச்சோறு’ மூட்டைகளைத் தலைச்சுமையாகக் கொண்டு செல்வார்கள். கிருஷ்ணாபுரம் மற்றும் செய்துங்கநல்லூரில் உள்ள கோயில் மண்டபங்களில் அல்லது கல் மண்டபங்களில் அமர்ந்து, தாங்கள் கொண்டு வந்த உணவைப் பகிர்ந்து உண்பார்கள். கருங்குளம் சாலைக்கு மிக அருகிலேயே தாமிரபரணி ஆறு ஓடுகிறது. இதனால் நீண்ட தூரம் நடந்த களைப்பு தீர ஆற்றில் குளித்துவிட்டு, அங்கேயே சமைத்து, இளைப்பாறிவிட்டுப் பயணத்தைத் தொடர்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கலாம் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

வி.எம். சத்திரம் மண்டபத்தில் விளக்கு வைப்பதற்கான ஒரு ‘மாடம்’ செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் மின்விளக்குகள் கிடையாது. அடர்ந்த இருளில், திருச்செந்தூர் செல்லும் வழித்தடத்தில் உள்ள இந்த மண்டபங்களில் ஏற்றப்படும் விளக்குகள் மட்டுமே பக்தர்களுக்குத் திசைகாட்டியாகவும், பாதுகாப்பாகவும் இருந்துள்ளன. கத்தரி வெயிலில் நடக்கும் பக்தர்கள், இந்த மண்டபத்திற்குள் நுழைந்தால் இயற்கையான குளிர்ச்சியை உணர முடியும். வெப்பத்தைக் குறைக்கும் வகையிலும், காற்று தாராளமாக உள்ளே வந்து செல்லும் வகையிலும், உயரமான விதானங்களுடன் இவை கட்டப்பட்டுள்ளன என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார்.

போக்குவரத்திற்கு இன்று நாம் பேருந்திலோ, பைக்கிலோ வேகமாகப் சென்று விடுகிறோம். ஆனால், நம் முன்னோர்களின் காலடித் தடம்படாத இடமே இருந்திருக்க முடியாது என்ற வகையில் காலாற நடந்து, அவர்கள் இளைப்பாறிய இடங்களில்தான் இன்றும் மண்டபங்கள் நிலைத்துநிற்கின்றன. சென்னை போன்ற தொலைதூரத்தில் இருந்து வந்த ஒரு வணிகர், நெல்லை அருகே மண்டபம் கட்டியிருக்கிறார் என்றால், திருச்செந்தூர் முருகன் மீதான பக்தியும், அந்தப் பாதையில் செல்லும் பக்தர்களின் நலனும் எவ்வளவு முக்கியமாகக் கருதப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம் என வரலாற்று ஆர்வலர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இவ்வாறு நினைவுசின்னமாக போற்றப்பட வேண்டிய இத்தகைய பாரம்பரியமிக்க கல்மண்டபங்கள் தற்போது முறையான பராமரிப்பின்றி களையிழந்து கிடப்பது வேதனை தருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Nellai-Thiruchendur road ,Nellai ,Thiruchendur Subramania Swamy Temple ,Lord ,Muruga ,Thaipusam… ,
× RELATED விவசாயிகள் வங்கி கணக்கில் பிப்.15 முதல்...