சென்னை ஆலந்தூரில் பேருந்து மோதி பெயர் பலகை விழுந்து விபத்து.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ரூ.3 லட்சம் நிதியுதவி

சென்னை: சென்னை, ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரண உதவி வழங்கியுள்ளார்.  

நேற்றைய தினம் (7-8-2022), பெருங்களத்தூரிலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, G.S.T. சாலையில் ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாகச் செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, அப்பலகை சாலையில் சாய்ந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பி.சண்முக சுந்தரம் (வயது 28) என்பவர் பலத்த காயமுற்று, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதோடு, போக்குவரத்துக் கழக நிதியிலிருந்து 1 இலட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபாயும், ஆகமொத்தம் மூன்று இலட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்நிதியினை நேரில் சென்று வழங்கியுள்ளார்.

Related Stories: