×

நான் சிரித்தால் தீபாவளி உள்பட பல ஹிட் பாடல்களை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி காலமானார்

பெங்களூரு: பழம்பெரும் பின்னணி பாடகி கே.ஜமுனா ராணி, உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். தென்னிந்திய திரையுலகின் பழம்பெரும் பின்னணி பாடகி கே.ஜமுனா ராணி (88) பெங்களூருவில் நேற்று முன்தினம் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் நேற்று மதியம் கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளில் 6,000க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.

1938ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த கே.ஜமுனா ராணி, தனது 8வது வயதில் ‘தியாகய்யா’ என்ற படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து, இளையராஜா இசையில் ‘நாயகன்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘நான் சிரித்தால் தீபாவளி’ என்ற பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியுடன் இணைந்து பாடியவர் என்று சொன்னால், இன்றைய தலைமுறையினருக்கு ஜமுனா ராணியை பற்றி தெரியும்.

தமிழில் கடைசியாக 1992ல் சிவகுமார், அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘இரவு நாடகம்’ என்ற பாடலை கே.ஜமுனா ராணி பாடியிருந்தார். 1952ம் ஆண்டு வெளியான ‘கல்யாணி’ என்ற படத்தில் ‘சக்சஸ் சக்சஸ்’, ‘ஒன் டூ த்ரீ’ ஆகிய பாடல்களின் மூலம் தமிழில் அறிமுகமான கே.ஜமுனா ராணி, தொடர்ந்து ‘காளை வயசு கட்டான சைசு’, ‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘பாட்டொன்று கேட்டேன்’,

‘காட்டில் மரம்’, ‘சின்ன சின்ன சிட்டு’, ‘காவிரி தாயே’, ‘உங்க மனசு ஒரு தினுசு’, ‘தாரா தாரா வந்தாரா’, ‘எந்த நாளும் சந்தோஷமே’, ‘யாரடி நீ மோகினி’, ‘குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’, ‘மாமா மாமா மாமா’, ‘ஆசையும் என் நேசமும்’ என்று அந்தக்காலத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருந்தார்.

திரையுலகில் 1950 மற்றும் 1960களில் டி.எம்.சவுந்தரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ் உள்பட ஏராளமான முன்னணி பாடகர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். அவரது 68 ஆண்டு கால கலையுலக சேவையை பாராட்டி, 1998ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.

Tags : Jamuna Rani ,Sittal ,Bengaluru ,K. Jamuna Rani ,Kallahalli ,Andhra Pradesh ,
× RELATED இயக்குனர்கள் ஏமாற்றினார்கள்: யாஷிகா ஆனந்த் கசப்பான அனுபவம்