தற்போது 94 வயதாகும் சிங்கீதம் சீனிவாச ராவ், தெலுங்கில் ‘சிங் கீதம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். வரும் 11ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், ‘திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ சிங்கீதம் சீனிவாச ராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். முதலில் அவரை மும்பையில் சந்தித்தபோது சில கதைகளை சொன்னார். ஒன்று ‘அத்வைதா’. அதுவே ‘புஷ்பக விமானம்’ படமாக மாறியது. மறு கதையை படமாக்க முடியவில்லை. அதுதான் ‘சிங் கீதம்’. எனது 20 வயதில் பேசிய இக்கதை, எனது 71வது வயதில் உருவாகியுள்ளது. சில யோசனைகளுக்கு எப்போதுமே அழிவில்லை.
வயது ஒரு தடையே இல்லை என்பதற்கு சிங்கீதம் சீனிவாச ராவ் ஒரு உதாரணம். அவரது பெயரை ‘மிஸ்டர் சங்கீதம்’ என்று அழைத்தபோது வருத்தப்பட்டார். 40 வருடங்களுக்கு பிறகு பெயர் குழப்பம் தீர்க்கப்பட்டுள்ளது. ‘புஷ்பக விமானம்’ படத்தை 5 ஸ்டார் ஓட்டல் ஏ.சி ரூமில் படமாக்கினோம். ‘படம் முழுக்க வசனமே இல்லை’ என்று பாராட்டினார்கள். எங்களுக்கோ ஏ.சியில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. சினிமா என்பது பேஷன். பிறகு அது வியாபாரமாக மாறியது. 15 லட்ச ரூபாயில் ‘புஷ்பக விமானம்’ படம் உருவானது.
ஒரு படம் வெற்றிபெறும் என்றோ, தோல்வி அடையும் என்றோ யாராலும் எழுதி கொடுக்க முடியாது. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் முதல் 20 நாட்கள் படமாக்கிய காட்சிகளை விட்டுவிட்டோம். அது தொடர்ந்து இருந்தால், கண்டிப்பாக அது ஒரு தோல்வி படமாக மாறியிருக்கும்’ என்றார்.
