சினிமாவில் நடித்தாலும் தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்பேன்: அஜித் குமார் பேட்டி

பாரிஸ்: அஜித்குமாரின் தாயார் மோகினி மணி, வயது மூப்பு காரணமாக கடந்த 30ம் தேதி காலமானார். அவரது இழப்பு அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், தாயார் இறந்த ஒரே வாரத்தில் மீண்டும் கார் பந்தயத்துக்கு திரும்பியுள்ள அஜித் குமார், சில நாட்களுக்கு முன்பு சோஷியல் மீடியாவில், ’கனத்த இதயத்துடன் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளேன்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ‘பால் ரிகார்ட் 2026’ என்ற தொடருக்காக பிரான்ஸ் சென்றுள்ள அஜித் குமார் அளித்துள்ள பேட்டி வருமாறு:
எனது ‘ரெட்ஆன்ட்’ அணியில் பணியாற்றும் மெக்கானிக்குகள், பொறியாளர்கள், என்னுடன் பயணிக்கும் வீரர்கள் உள்பட அனைவரும் ஒரு மிகச்சிறந்த குழுவாக செயல்பட்டு வருகிறோம். இவர்களுடன் இருப்பது எனது 2வது குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நான் துபாயில் வசித்து வருகிறேன். எனது குடும்பத்தினர் இந்தியாவில் இருக்கின்றனர். கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்க வேண்டியிருப்பதால், தற்போதைய பந்தய காலங்களில் ஐரோப்பாவில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறேன். அடுத்த ஆண்டுக்கான பந்தய திட்டங்களை தற்போதே தயார் செய்து வருகிறோம். ‘ஏசியன் லெ மான்ஸ்’, ‘இஎல்எம்எஸ்’ ஆகிய தொடர்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளோம். என்னால் எவ்வளவு காலம் கார் பந்தயங்களில் ஈடுபட முடியுமோ, அவ்வளவு காலம் இந்த ‘கிரெவென்டிக்’ தொடரில் தொடர்ந்து பங்கேற்க விரும்புகிறேன். இவ்வாறு அஜித் குமார் கூறியுள்ளார்.

Related Stories: