மும்பை: தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமின்றி, இந்தி படங்களிலும் நடித்தவர் சமீரா ரெட்டி (47). சமீபத்தில் அவர் அளித்த உருக்கமான பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு 24 வயது இருக்கும்போது, மற்ற நடிகைகள் விமான நிலையத்துக்கு வரும்போது, விலையுயர்ந்த பைகளை வைத்திருப்பதை பார்த்து நானும் வாங்கினேன். 1.70 லட்ச ரூபாய் மதிப்பிலான லூயிஸ் உய்ட்டன் பையை எதற்காக வாங்கினேன் என்றே தெரியவில்லை.
மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்பதற்காக, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேனல் ஜாக்கெட் மற்றும் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான டயார் கவுச்சோ பைகளை வாங்கினேன். பிரபலமாகி விட்டேன் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் நான் செய்தேன். அப்போது எனக்கு இருந்த தீவிர மன அழுத்தத்தின் காரணமாக, என்னை மற்றவர்களுடன் சேர்த்து ஒப்பிட்டு இதுபோன்ற பொருட்களை வாங்கினேன்.
அன்றைக்கு அந்த பைகளை வாங்குவதற்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், இன்று எனக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும். எனவே, தேவையற்ற ஆடம்பர பொருட்களை வாங்கி பணத்தை வீணாக்காமல், தொடர்ந்து தங்கத்தில் மட்டும் முதலீடு செய்யுங்கள் என்று எனது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் அறிவுறுத்துகிறேன்.
