சென்னை: கடந்த 2017ல் ‘எய்தவன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சக்தி ராஜசேகரன். அவர் தற்போது இயக்கும் புதிய படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். எஸ்எஸ்டி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஃபெரோஸ் ஹுசேன் ஷெரிஃப் தயாரிக்கிறார். இப்படம் குறித்து சக்தி ராஜசேகர் கூறுகையில், ‘‘சமூகத்தில் நடக்கும் சில பிரச்னையை வீட்டு பாதுகாவலராக இருக்கும் ஜெய் எப்படி சரி செய்கிறார் என்பது கதை. கிரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தின் கதைக்கு ஹீரோயின் அவசியம் இல்லை என்று எனக்கு தோன்றியது. முன்னதாக பல ஹீரோக்களிடம் இதன் கதையை சொன்னபோது ஹீரோயின் இல்லை என்பதால் நிராகரித்தார்கள். ஆனால் நான் அந்த முடிவில் தெளிவாக இருந்தேன். என் கதையை ஜெய் முழுவதும் புரிந்துகொண்டார். ஜெய் இதுவரை ஃபேமிலி டிராமா கதைகளில் மட்டுமே நடித்து வந்தார். அவருக்கும் இது புதுமையான கதை களமாக இருக்கும் என்று எங்கள் இருவருக்கும் தோன்றியது. இப்படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசை முக்கிய பங்காற்ற உள்ளது. பிரிட்டோ மைக்கல் இசையை கவனித்து கொள்கிறார். படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்குகிறது’’ என்றார்.

