மும்பை: இந்தித் திரையுலகில் தென்னிந்திய நடிகர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடு குறித்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக நடித்த ரெஜினா கசாண்ட்ரா, நடிகர் நவாசுதீன் சித்திக் உடன் இணைந்து நடித்துள்ள ‘செக்சன் 108’ என்ற திரில்லர் படத்தின் பிரசாரத்தின் போது தனது கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் வந்தவர் என்பதால் எனது மொழி உச்சரிப்பு மற்றும் பின்னணி குறித்து கிண்டல் செய்து என்னைச் சிறுமைப்படுத்தினார்கள். திரைத்துறையில் அனுபவம் வாய்ந்த என்னை ஒரு புதிய நடிகையைப் போல நடத்தினர். இந்தி நடிகர்களின் கண்டிப்பான நடவடிக்கையை ‘நேர்மை’ என்று அழைக்கின்றனர். அதே செயலை தென்னிந்திய நடிகர்கள் செய்தால் ‘தலைக்கனம் பிடித்தவர்கள்’ என்று முத்திரை குத்தப்படுகின்றனர்.
மும்பையில் பணியாற்றுவதை விரும்பினாலும், எனது வீடும் இதயமும் தென்னிந்திய சினிமாவிலேயே உள்ளது’ என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாக ‘பான்-இந்தியா’ திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று எல்லைகளைக் கடந்து சாதனை படைத்து வருவதால், தென்னிந்திய கலைஞர்களுக்கான அங்கீகாரம் ஓரளவுக்குக் கிடைத்து வந்தாலும், இன்னும் பல இடங்களில் நுட்பமான முறையில் பாகுபாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
