டெல்லி: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளும் நேற்று கொல்லப்பட்டனர் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
ஆபரேஷன் “சிந்தூர்” போல “மகாதேவ்” வெற்றி: அமித் ஷா
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளும் நேற்று கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூரைப் போலவே ஆபரேஷன் மகாதேவும் முழு வெற்றி அடைந்தது. இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 3 பேரையும் சுட்டுக் கொன்று பழி தீர்த்து விட்டோம்.
பஹல்காம் தீவிரவாதி சுலைமான் கொல்லப்பட்டார்: அமித்ஷா
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய சுலைமான் என்ற தீவிரவாதி நேற்று கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட 3 பேருமே பஹல்காம் தாக்குதலை முன்னின்று நடத்திய தீவிரவாதிகள் தான் என்று உறுதியாக கூறினார். இந்தியாவுக்கு எதிராக இனி யோசிக்க முடியாத அளவுக்கு தாக்குதல் நடத்தி உள்ளோம் என்றார்.
ஆப்ரேஷன் மகாதேவ் மே 22ல் தொடங்கியது
மஹாதேவ் நடவடிக்கை மூலம் 2 நாளாக நடந்த தேடுதல் வேட்டை நேற்று நடைபெற்றது. இதில் சுலைமான், ஜிப்ரான், ஆப்கான் ஆகிய 3 தீவிரவாதிகள் நேற்று கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல் ஸ்ரீநகர் கொண்டுவரப்பட்டு, என்ஐஏ காவலில் உள்ளவர்கள் அடையாளத்தை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ராணுவம், சிஆர்பிஎப், போலீசார் இணைந்து மகாதேவ் நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்று அவர் கூறினார்.
ஜூலை 22ல் தீவிரவாதிகளின் இருப்பிடம் உறுதியானது
ஜூலை 22ல் தீவிரவாதிகளின் இருப்பிடம் உறுதி செய்யப்பட்டது; ராணுவ சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பஹல்காமில் தீவிரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்களும், பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களும் ஒன்றுதான். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்தவர்கள் ஏற்கனவே என்ஐஏவால் கைது செய்யப்பட்டனர்.
ஆப்ரேஷன் மகாதேவ் விவரங்கள் வெளியிடப்படும்
ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கை தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக 1000 பேரிடம் விசாரணை நடைபெற்றது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எம்.9 ரக துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அமித் ஷா கூறினார்.
சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் பாகிஸ்தானியர்கள்
நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் பாகிஸ்தானியர்கள். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி அடையாதது ஏன்? என அமித் ஷா கேள்வி எழுப்பினார். பஹல்காம் தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தனர் என ப.சிதம்பரம் நேற்று கேள்வி எழுப்பி இருந்தார்.
பாகிஸ்தானை காப்பாற்ற ப.சிதம்பரம் முயற்சி: அமித் ஷா
பாகிஸ்தானை காப்பாற்ற ப.சிதம்பரம் முயற்சிப்பதாக அமித்ஷா மக்களைவையில் குற்றச்சாட்டி உள்ளார். தீவிரவாதிகள் பாக். கைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என ப.சி. கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தகால ஆட்சியில் காப்பாற்றப்பட்ட நபர்களை மோடி அரசு தீர்த்துக்கட்டி விட்டது. பாக் உடனான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டவர் பிரதமர் மோடி என்று அவர் கூறினார்.
The post பஹல்காம் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை.. ஆபரேஷன் “சிந்தூர்” போல “மகாதேவ்” வெற்றி: மக்களவையில் அமித் ஷா விளக்கம்!! appeared first on Dinakaran.
