குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி: கலசப்பாக்கம் அருகே சோகம்

கலசப்பாக்கம், ஜூலை 17: கலசப்பாக்கம் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தேவனாம்பட்டு ஊராட்சி, காட்டுப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. விவசாயி. இவரது மனைவி பார்கவி. இவர்களது 2 வயது ஆண் குழந்தை முகிலன். நேற்று முன்தினம் குழந்தை முகிலன் வீட்டில் வெளியே வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அங்குள்ள குடிநீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது.

அதன் அருகே சென்ற முகிலன் எதிர்பாராதவிதமாக தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கினான். சிறிது நேரத்தில் வெளியே வந்த தாய் பார்கவி குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தை குடிநீர் தொட்டியில் கிடப்பது கண்டு கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தையை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை முகிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி: கலசப்பாக்கம் அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: