கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 

சேந்தமங்கலம், ஜூலை 14: கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இரவில் குளிர் நிலவி வருகிறது. காலையில் சில்லென்று குளிர் காற்று வீசி வருகிறது. காலை நேரங்களில் கடுமையான மேகமூட்டம் இருந்து வருகிறது. மலைப்பாதையில் மேகமூட்டங்கள் சாலையை கடந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால், அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது.

விடுமுறை தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மழை இல்லாததால் குறைவாக தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனப்பாறை அருவிகளில் குளித்து அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசிபெரியசாமி கோயில்களில் சாமிதரிசனம் செய்தனர். தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையத்தை சுற்றி பார்த்துவிட்டு, வாசலூர்பட்டி ஏரியில் குழந்தைகளுடன் படகு சவாரி செய்தனர். மாலை வீடு திரும்பும் போது சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் மிளகு, தேன், அன்னாசி, கொய்யா, மலை வாழைப்பழம், கமலா ஆரஞ்சு, பலா உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர்.

 

The post கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: