மகாராஷ்டிராவை போல பீகாரில் வெற்றி பெற ஏழைகளின் வாக்குரிமையை திருட பாஜ சதி திட்டம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாட்னா: கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்தது போல பீகார் தேர்தலிலும் மோசடி நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாட்னாவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி நேற்று பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி,‘‘தேர்தல் ஆணையம் சமீபத்தில் பாஜ-ஆர்எஸ்எஸ் பாணியில் பேசத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் அதன் பின் வாக்காளர் பட்டியலில் வெளிப்படையான முரண்பாடுகள் காணப்பட்டன. அங்கு ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் என்று காட்டப்பட்டது. முரண்பாடுகள் குறித்து கேட்டபோது தேர்தல் ஆணையம் எங்களிடம் விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கு மறுத்து பாஜ-ஆர்எஸ்எஸ் பாணியில் தொடர்ந்து பேசியது.

அவர்கள் பாஜவுக்கு அல்ல மக்களுக்காக சேவை செய்வதற்காக இங்கு வந்துள்ளனர் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மகாராஷ்டிரா மாதிரியை வேறு இடங்களில் பிரதிபலிக்க விரும்புகிறார்கள். இந்த முறை அவர்கள் பல வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு முயற்சிக்கலாம். ஆனால் இது பீகார் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலின்போது பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக மோசடி செய்யப்பட்டது.

அவர்கள் பீகாரிலும் மீண்டும் அதனை செய்ய விரும்புகிறார்கள். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்காளர் பட்டியல் மோசடியின் மகாராஷ்டிரா மாதிரியின் நீட்டிப்பு ஆகும். மக்களின் வாக்களிக்கும் உரிமையை மட்டுமல்ல. அவர்களின் முழு எதிர்காலத்தையும் இது திருடிவிடும். தேர்தல் ஆணையம் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும். அது பாஜவின் அறிவுறுத்தல்களின்படி செயல்படுகின்றது. இந்த தேர்தல் ஆணையர்கள் பாஜவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது ஏழைகளின் வாக்குரிமையை திருடும் சதி திட்டமாகும். வாக்காளர்களின் குறிப்பாக இளைஞர்களின் வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் திருடுவதற்கு அனுமதிக்க மாட்டோம்\\” என்றார். இதேபோல் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் எம்ஏ பேபி, சிபிஐ(எம்எல்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டச்சாரியா, உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர்.

* உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
பீகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் நீதிபதிகள் சுதன்ஸூ துலியா மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

The post மகாராஷ்டிராவை போல பீகாரில் வெற்றி பெற ஏழைகளின் வாக்குரிமையை திருட பாஜ சதி திட்டம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: