அமைச்சர் கோவி.செழியன் தகவல் பி.எட் விண்ணப்ப பதிவு நீட்டிப்பு

சென்னை: நடப்பாண்டு பி.எட். மாணவர் சேர்க்கையில் 7 அரசுக் கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசுக் கல்லூரியில் 900 இடங்களும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1,140 இடங்களுமாக மொத்தம் 2040 இடங்கள் உள்ளன. இவற்றில் 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை கடந்த மாதம் 20ம் தேதி சென்னை ராணி மேரி கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர். ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 9ம் தேதியுடன் (நேற்றுடன்) நிறைவடைந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பி.எட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடந்த மாதம் 20ம் தேதி முதல் தொடங்கப்பட்ட விண்ணப்ப பதிவு, நேற்றுடன் (ஜூலை 9) முடிவடைந்ததால், மாணாக்கர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் தேதி வரும் 21ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, 31ம் தேதி அன்று மாணாக்கர் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 4 முதல் 9ம் தேதிக்குள் மாணாக்கர்கள் தங்கள் விருப்ப கல்லூரியை தேர்வு செய்யலாம். ஆகஸ்ட் 13ம் தேதி அன்று மாணாக்கர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ஐடி மூலம் www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 20 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட். முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அமைச்சர் கோவி.செழியன் தகவல் பி.எட் விண்ணப்ப பதிவு நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: