துபாயில் நடந்த கேரள மாணவர் அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக். கிரிக்கெட் வீரர்கள்: உற்சாக வரவேற்பு அளித்ததால் சர்ச்சை

திருவனந்தபுரம்: துபாயில் கேரள முன்னாள் மாணவர் அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அப்ரிடி, உமர் குல்லுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் கொச்சி பல்கலைக்கழக பி.டெக் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி துபாயில் கடந்த 25ம் தேதி நடந்தது. முன்னாள் மாணவர் அமைப்பு நடத்திய இந்நிகழ்ச்சியில் திடீரென பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சாகித் அப்ரிடி மற்றும் உமர் குல் வருகை தந்தனர்.

அவர்களை பார்த்ததும் சிலர், அதிரடி வீரர் அப்ரிடியின் செல்லப் பெயரான ‘பூம் பூம்’ என கோஷமிட்டு வரவேற்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. துபாயில் உள்ள பத்திரிகைகளில் செய்தி வெளியானது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு கடுமையான கருத்துக்களை அப்ரிடி கூறி வருகிறார். இந்திய ராணுவத்தையும், இந்திய மக்களையும் அவமதிக்கும் வகையில் பேசி வருகிறார். அவருக்கு கேரள அமைப்பு விழாவில் உற்சாகமாக வரவேற்கப்பட்டதை பார்த்து சமூக வலைதளங்களில் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் மாணவர் அமைப்பினர் அளித்த விளக்கத்தில், ‘‘இந்த நிகழ்ச்சியில் எங்களின் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில் அப்ரிடி, உமர் குல் இல்லை. அந்த அரங்கில் அடுத்ததாக நடக்கும் நிகழ்ச்சிக்காக அவர்கள் வந்திருந்தனர். எங்கள் நிகழ்ச்சியின் இறுதிகட்டத்தில் அவர்கள் மேடை ஏறியதால் குழப்பம் ஏற்பட்டது. இந்த செயலுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறோம். யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’’ என கூறி உள்ளனர்.

The post துபாயில் நடந்த கேரள மாணவர் அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக். கிரிக்கெட் வீரர்கள்: உற்சாக வரவேற்பு அளித்ததால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: