சோளிங்கரில் வீடு புகுந்து பயங்கரம்; 10ம் வகுப்பு மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை முயற்சி: தடுக்க சென்ற மாணவிக்கும் கத்திக்குத்து

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகத்குமார் (40), கார்பென்டர். இவரது மகள் ஜனனி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். ஜெகத்குமாரின் அக்கா வாணி. இவரது மகள்கள் லக்ஷயா (16), சரண்யா (11) ஆகியோர் கோடை விடுமுறைக்காக புலிவலம் வந்து தங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் வாணி அவரது இளைய மகள் சரண்யா ஆகிய இருவரும் வீட்டின் வாசற்படியில் அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் திடீரென ஜெகத்குமார் வீட்டின் உள்ளே புகுந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜனனியை வயிறு, கழுத்து என உடல் முழுவதும் கொடூரமான முறையில் குத்தினார். இதை தடுக்க சென்ற லக்ஷயாவையும் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் ஜனனி சாய்ந்தார். லக்ஷயா படுகாயமடைந்து அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வாணி மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதைப் பார்த்த அந்த வாலிபர் உடனடியாக, அந்த வீட்டின் கதவை உள்பக்கம் பூட்டிக்கொண்டார். அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் ஜனனி சடலமாக கிடந்தாள். வாலிபர் தனக்கு தானே கத்தியால் கீறி தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடி கொண்டிருஇந்ஹனர்.

தகவலறிந்த சோளிங்கர் மற்றும் கொண்ட பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த லக்‌ஷ்யா மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜனனியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்த வாலிபர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கேஜி கண்டிகை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(21) என்பது தெரியவந்தது. இவர் ஒரு தலை காதலால் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post சோளிங்கரில் வீடு புகுந்து பயங்கரம்; 10ம் வகுப்பு மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை முயற்சி: தடுக்க சென்ற மாணவிக்கும் கத்திக்குத்து appeared first on Dinakaran.

Related Stories: