சிறிய தயாரிப்பு நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவதால் நோட்டு புத்தகங்கள் விலை ரூ.8 முதல் ரூ.20 வரை குறைந்தது: பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி

தியாகராஜநகர்: கொரோனாவின் போது மூடப்பட்ட பல நோட்டு புத்தகம் தயாரிப்பு நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு நோட்டு புத்தகங்கள் விலை எதிர்பாராத விதமாக ரூ.8 முதல் ரூ.12 வரை குறைந்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின்னர் கல்வி நிறுவனங்கள் வருகிற ஜூன் 2ம்தேதி திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் நெல்லையில் விற்பனைக்கு அதிக அளவில் வந்து குவிந்துள்ளன. மாணவர்களின் மனம் கவரும் வகையில் பளபள அட்டையில் விதவிதமான இயற்கை காட்சிகளுடன் நோட்டுகள் பிரிண்ட் செய்யப்பட்டு வந்துள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டாலும் கூடுதல் தேவைக்கு மாணவர்கள் நோட்டு புத்தகங்கள் வெளியில் வாங்கிக்கொள்கின்றனர். இதுபோல் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்கள் தேவைக்கு நோட்டு புத்தகங்கள் வாங்குகின்றனர்.

சில தனியார் பள்ளிகள் மொத்தமாக ஆர்டர் செய்து தங்கள் பள்ளிக்கு தேவையான நோட்டு புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு கொடுக்கின்றனர். இந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் ஆர்டர் குவிகின்றன. இது குறித்து நெல்லையில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை மேற்கொள்ளும் நோட்டு புத்தக வியாபாரிகள் கூறியதாவது: ‘கடந்த 4 ஆண்டுகளை ஒப்பிடுகையில் நோட்டு புத்தகங்கள் விலை இந்த ஆண்டு குறைந்துள்ளது. கொரோனா ஏற்பட்ட போது பல சிறிய நோட்டு புத்தக தயாரிப்பு மில் நிறுவனங்கள் மூடப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் நோட்டு புத்தகங்கள் விலை உயர்ந்தது. தற்போது கடந்த ஆண்டு முதல் மீண்டும் பல நிறுவனங்கள் புதுபொலிவுடன் நோட்டு புத்தகம் தயாரிக்க தொடங்கி உள்ளன. மதுரை, சிவகாசியில் இருந்து நோட்டு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வரவழைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டே நோட்டு புத்தக விலை சிறிய அளவில் குறைந்தது. இந்த ஆண்டு மேலும் விலை குறைந்துள்ளது. கடந்த 2 ஆண்டை விட 40 சதவீதம் குறைந்துள்ளது. 150 பக்கம் கொண்ட லாங் சாஸ் நோட்டு ரூ.40ல் இருந்து ரூ.35ஆக கடந்த ஆண்டு குறைந்தது. இது இந்த ஆண்டு ரூ.32ஆக குறைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.8 குறைந்துள்ளது. மூலப்பொருட்களும் அதிக அளவில் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. சரக்கு தேவையான அளவு கிடைப்பதும் விலை குறைவுக்கு காரணம். கிளாஸ்மெட் பிராண்ட் நோட்டுகள் கடந்த ஆண்டு ரூ.85ல் இருந்து ரூ.65ஆக எம்ஆர்பி விலை குறைந்தது. தற்போது மேலும் ரூ.5 குறைந்து ரூ.60 ஆக குறைந்துள்ளது. பள்ளிகள் 2ம்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப நோட்டு புத்தகங்களை வழங்க தயார் நிலையில் இருக்கிறோம்’ என்றார்.

The post சிறிய தயாரிப்பு நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவதால் நோட்டு புத்தகங்கள் விலை ரூ.8 முதல் ரூ.20 வரை குறைந்தது: பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: