ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு 178 பள்ளிகளுக்கு பாடகுறிப்பேடு அனுப்பும் பணிகள் மும்முரம்

நாமக்கல் : கோடை விடுமுறைக்கு பின்பு வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 178 பள்ளிகளுக்கு பாடகுறிப்பேடுகள் அனுப்பும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் நடத்தப்பட்டு வரும் நலப்பள்ளிகளில், 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் இலவச பாடப்புத்தகம், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவச பாடகுறிப்பேடுகள்(நோட்டுகள்) வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு பின்பு, வரும் 2ம் தேதி(திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளில், அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கன்டெய்னர்கள் லாரிகள் மூலம் பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வந்து சேர்ந்தது.

தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள பாடப்புத்தக கிடங்கில் இறக்கி வைக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, கடந்த 10 நாட்களாக தேவையான பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி பாடப்புத்தங்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள பாடநூல் வினியோக கிடங்குகளில் இருந்து 10 தனியார் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, மாவட்டத்தில் உள்ள 178 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தேவையான 17 வகையான பாடகுறிப்பேடுகள்(நோட்டுகள்) அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை இன்னும் 2 நாளில் முடிக்க, கல்வித்துறை அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் தற்போது படித்து வரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கேற்ப, பாடகுறிப்பேடுகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 178 பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 74 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகமும், 53 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு இலவச பாடகுறிப்பேடுகளும் வழங்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாடப்புத்தகம், பாடகுறிப்பேடுகள் ஆசிரிய, ஆசிரியைகள் மூலம் விநியோகம் செய்யப்படும்.

மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகள் வாரியாக பாடப்புத்தகம், பாடகுறிப்பேடுகள் தனியார் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.

The post ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு 178 பள்ளிகளுக்கு பாடகுறிப்பேடு அனுப்பும் பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: