ராசிபுரம், மே 28: ராசிபுரம் அருகே, வக்கீல் வீட்டில் 6 பவுன் நகையை திருடிச் சென்ற ஓசூரை சேர்ந்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியை சேர்ந்தவர் சந்திரன்(39). வக்கீலான இவர், ராசிபுரம் அடுத்த கோரைக்காடு பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 13ம்தேதி, வீட்டை பூட்டி விட்டு புதுப்பட்டிக்கு சென்றுள்ளார். மறுநாள் மீண்டும் வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க காசு, தோடு, செயின் என மொத்தம் 6 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து சந்திரன் அளித்த புகாரின் பேரில், ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று ராசிபுரம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியில் டூவீலரில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மூக்காண்டப்பள்ளி அன்னை சத்யா நகரை சேர்ந்த அர்ஜூனன் மகன் தர்மலிங்கம் (எ) பிரபு(34) என்பதும், கடந்த 13ம் தேதி வக்கீல் சந்திரன் வீட்டில் 6 பவுன் நகைகளை திருடிச்சென்றதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post ராசிபுரம் அருகே வக்கீல் வீட்டில் 6 பவுன் நகை திருடியவர் கைது appeared first on Dinakaran.