கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் களை கட்டியது பக்ரீத் நெருங்குவதால்

 

கே.வி.குப்பம், மே 27: பக்ரீத் நெருங்கும் நிலையில் கே.வி.குப்பத்தில் நேற்று காலை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை சந்தை வழக்கம்போல் கூடியது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் லோடு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தனர். ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. வெள்ளாடுகள், முத்து கிடாய் ரகங்கள், நாட்டு ரக கிடாய்கள், கசையாடுகள், செம்மறி ஆடுகள் என பல்வேறு ரகங்கள் கொண்ட ஆடுகள் அதிகம் கொண்டுவரப்பட்டிரூந்தது. தலா ஒரு ஆடு ரூ.20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், பக்ரீத் பண்டிகை அடுத்த மாதம் 6ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், ஆடுகள் வெட்டுபவர்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கிசென்றனர். இதனால் ஆடுகள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதேபோன்று வருகிற வாரங்களில் கூடுதலாக வியாபாரம் களை கட்டும் என்றனர்.

The post கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் களை கட்டியது பக்ரீத் நெருங்குவதால் appeared first on Dinakaran.

Related Stories: