பாராக மாறி வருகிறது பழநி- கொடை மலைச்சாலை

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பழநி : பழநி- கொடைக்கானல் மலைச்சாலை பாராக மாறுவதை தடுக்க நடவடிக்கை வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் அதிக சுற்றுலா பயணிகள் வரும் முக்கிய இடமாக கொடைக்கானல் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு பழநி வழியாகவும், வத்தலக்குண்டு வழியாகவும் செல்லலாம். தமிழகத்தின் மேற்கு பகுதி, கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாக பழநி- கொடைக்கானல் மலைச்சாலை உள்ளது. பழநியில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் கொடைக்கானல் அமைந்துள்ளது. இதில் 15 கிலோ மீட்டர் மட்டுமே சமவெளி பகுதியாகும்.

50 கிலோ மீட்டர் மலைப்பாதை பயணமாகும். மரங்கள் சூழ்ந்த பசுமையான மலைப்பாதை தற்போது குடிமகன்களின் பாராக மாறி உள்ளது. சாலையோரங்களில் மது அருந்துவது, மது அருந்தும் பாட்டில்களை அங்கேயே வீசி செல்வது போன்ற அடவாடிகளில் ஈடுபடுகின்றனர். சிலர் போதை தலைக்கேறி பாட்டில்களை உடைத்து போட்டு விட்டு சென்று விடுகின்றனர். உடைந்த பாட்டில்களை மிதிக்கும் வனவிலங்குகள் காயமடைகின்றன.

மேலும் வீசி செல்லும் எச்சில் உணவுகளை உண்ண வரும் விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் உண்டாகி உள்ளது. மேலும் சிலர் போதையில் சாலையில் ஆட்டம் போடுவதால், அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பீதிக்குள்ளாகின்றனர்.

எனவே, பழநி- கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தும் குடிமகன்கள் மீது வனத்துறை மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாராக மாறி வருகிறது பழநி- கொடை மலைச்சாலை appeared first on Dinakaran.

Related Stories: