தேவாரம் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேய்ச்சல் நிலங்களுக்கு தட்டுப்பாடு இருக்காது

*கால்நடை வளர்ப்போர் நம்பிக்கை

தேவாரம் : தேவாரம் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களுக்கு தட்டுப்பாடு இனி வராது என கால்நடை வளர்ப்போர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு தொழில் மிகப் பிரதானமாக உள்ளது.

குறிப்பாக தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, கம்பம் சின்னமனூர் உள்ளிட்ட பகுதியில் அதிகமான அளவில் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.

பால் உற்பத்திக்காக மாட்டிற்காக கால்நடைகள் வளர்க்கப்படுபவர்கள் ஒரு புறம் இருந்தாலும், இயற்கையான உரங்கள், குறிப்பாக இயற்கை உரமான மாட்டுசாணம், கோமியம் போன்றவற்றிற்காகவும் மலைமாடுகள், ஜல்லிக்கட்டு மாடுகள், வளர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த மாடுகளை தோட்டங்களிலோ, அல்லது வனப் பகுதிகளுக்கு பக்கத்தில் உள்ள நிலங்களிலோ மேய்ந்து விட்டு மீண்டும்,இருப்பிடங்களுக்கு கொண்டு வருவது வழக்கமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் என்பது ஏப்ரல், மாதம் தொடங்கி மே வரை நீடிக்கும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கோடை முடியும் முன்பே குறிப்பாக தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான முன்னேற்பாடாக காற்று வீசத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் சாரல் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

மதிய நேரங்களில் வேலைகளே செய்ய முடியாத அளவிற்கு காற்று வீசுகிறது. இதனால் காடுகள் தோட்டங்கள் விளைநிலங்களில் உள்ள பச்சை தீவனங்கள் பெருகிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மழை என்பது அதிகளவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதனால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு மேய்ச்சல் நிலங்கள் என்பது இனி வரும் காலங்களில் கிடைக்கும் என்றும், தற்போதைய தட்டுப்பாடு இனி வரும் காலங்களில் ஏற்படாது. கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போகம் நெல் விவசாயம் செய்வதற்கு தென்மேற்கு பருவமழை மிகவும் அவசியம். ஆனால் பெரியாறு அணைப்பகுதியில் கடந்த சிலநாட்களாக மழை பெய்ய தொடங்கியுள்ளதையடுத்து, அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

தட்டுப்பாடு இல்லை

இந்த மழை காரணமாக தோட்டப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட பச்சை தீவனங்களுக்கு தட்டுப்பாடு இருக்காது என கால்நடைகளை வளர்ப்போர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பால் உற்பத்திக்காக வளர்க்கப்படும் பசு மாடுகளுக்கு வெளியில் இருந்து மாவு, புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்கள் விலைக்கு வாங்கி போட்டாலும் இயற்கை இலை தலைகள், புல் பூண்டுகள் என்பது மிக முக்கியமானதாக உள்ளது.

இதனால் மழை காலம் தொடங்கியுள்ளதால் இயற்கை புல்களுக்கு இனி வரும் மூன்று நான்கு மாதங்கள் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உருவாகும் என்பதால் கால்நடைகளை வளர்ப்போர் நம்பிக்கை அடைந்து வருகின்றனர். மழையால் மகிழ்ச்சிஇதுகுறித்து கால்நடைகளை வளர்ப்போர் கூறுகையில், ‘‘தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான காற்று வீசத் தொடங்கி உள்ளது. குறிப்பாக தேவாரம் – உத்தமபாளையம் பகுதிகளில் அதிகமான அளவில் காற்று வீசுவது மழைக்கான நல்ல அறிகுறியாகும்.

அதிகமான வெப்பம் கொளுத்தி இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் இயற்கை பச்சை தீவனங்கள் உருவாவதற்கான வாய்ப்பாகும். மாடுகளுக்கு இயற்கை தீவனங்கள் கிடைப்பதில் இனி வரக்கூடிய ஜூன் தொடங்கி 4 மாதங்களுக்கு பிரச்னை இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் கிடைக்கும் போது, பால் மாடுகளுக்கு பால் உற்பத்தி பெருகும். மழை பெய்தால் மட்டுமே கால்நடைகள் தப்பும் என்ற சூழ்நிலையில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’’என்றனர்.

The post தேவாரம் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேய்ச்சல் நிலங்களுக்கு தட்டுப்பாடு இருக்காது appeared first on Dinakaran.

Related Stories: