வேலூர், மே 26: கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் முடிந்து வரும் 2ம் தேதி மீண்டும் திட்டமிட்டபடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே புத்தகங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு சீருடைகளும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக தூய்மை பணிகள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் வகுப்பறைகள், மேஜைகள், நாற்காலிகள், பலகைகள் என அனைத்தும் துப்புரவு செய்யப்பட வேண்டும். குடிநீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள் துப்புரவு செய்து, குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும்.
கழிவறைகளை தூய்மைப்படுத்தி தேவையான வசதிகளை செய்ய வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தி புல் மற்றும் புதர்கள் அகற்றப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மாணவர்கள் அனைவரும் சுத்தமான வகுப்பறைகளில் படித்து, பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டும். அதோடு மின் இணைப்புகளை சரிபார்த்து ஏதேனும் பழுதுகள் இருந்தால் சரிசெய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக பெற்றோருடன் கடைகளுக்கு சென்று பை, பென்சில், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
The post வரும் 2ம் தேதி பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரம் கோடை விடுமுறை முடிவடைந்து appeared first on Dinakaran.