இதையடுத்து ரவிக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் வந்து விசாரித்தனர். அப்போது, காப்பகத்தில் இருந்தவர்கள் ஆழியாருக்கு சுற்றுலா அழைத்து சென்றபோது வருண்காந்த்தை காணவில்லை என அலட்சியமாக பதில் அளித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார், கடந்த 16ம் தேதி ஆழியார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், மாயமான வருண்காந்தை தேடி வந்தனர். இந்நிலையில், காப்பகத்தில் இருந்த 10க்கும் மேற்பட்ட சிறுவர்களை காப்பகத்தை நடத்தும் நிர்வாகி ஒருவரான சாஜி ஜோதி நகரில் உள்ள தனது வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், தனி அறையில் சிறுவர்களை அடைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களை பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே, காப்பக நிர்வாகி சாஜி தலைமறைவானார்.
இந்நிலையில், வருண்காந்த் காப்பகத்தில் இருக்கும் போது காயங்களுடன் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. சந்தேகமடைந்த போலீசார் நேற்று அதிகாலை காப்பக பாதுகாப்பாளர் ரித்தீஷ் (26), நிர்வாகிகளில் ஒருவரான கிரிராம் (36), பணியாற்றிய ரங்கநாயகி (32), சாஜிவின் தந்தை செந்தில்பாபு (55) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
இதில் கடந்த 12ம் தேதி வருண்காந்த்தை கட்டையால் தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். இதில், பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காப்பக நிர்வாகிகள் கொலையை மறைப்பதற்காக வருண்காந்தின் உடலை நடுப்புணி அருகே பி.நாகூரில் உள்ள காப்பக நிர்வாகி டாக்டர் கவிதாவின் தோட்டத்தில் குழிதோண்டி புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து, எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் நடுப்புணி அருகே உள்ள தோட்டத்துக்கு சென்ற போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த 7 குழிகளில் ஒரு குழி மூடப்பட்டு அதன் மேல் செடி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அந்த குழியை வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டினர்.
இதில், மாயமான வருண்காந்த் உடல் பாலித்தீன் பையில் சுற்றி, துர்நாற்றம் வீசாமல் இருக்க மாட்டு சாணம் போடப்பட்டிருந்தது. இதையடுத்து, மருத்துவ குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் தொடர்புடைய மற்றவர்களையும் விரைந்து கைது செய்ய உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெண் டாக்டர் கவிதா உள்பட சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பொள்ளாச்சி அருகே பயங்கரம் வாலிபரை அடித்து கொலை செய்து பெண் டாக்டர் தோட்டத்தில் புதைப்பு: 4 பேர் கைது appeared first on Dinakaran.