வாஷிங்டன்: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டிம் குக்கிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கைக்குப் பிறகும் கூட இந்தியாவில் ஐபோன்களை தயாரிப்பதில் ஆப்பிள் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், ஒசூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆலைகளில் ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் விற்கப்படும் 6 கோடி ஐபோன்களிலும் இந்தியாவிலேயே தயாரிக்க ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் விற்கப்படும் மொத்த ஐபோன்களையும் 2026 இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கும் வகையில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் விற்கப்படும் ஐபோன்களில் 18% இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவிலோ அல்லது வேறு எங்கும் தயாரிக்கப்பட்டோ அமெரிக்காவுக்கு ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை தான் விரும்பவில்லை. அமெரிக்காவில் ஐபோன்களை தயாரிக்குமாறு ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக்கிடம் ஏற்கனவே கூறினேன். ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து ஐபோன்களை வெளிநாட்டில் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ததால் 25% வரி என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
The post இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.