அந்த கட்சியின் விதிப்படி மாநில அளவிலான அமைப்பு தேர்தலை நடத்தி முடித்த பிறகுதான் தேசிய தலைவருக்கான தேர்தலை நடத்த வேண்டும். அதன்படி, தற்போது பல மாநிலங்களில் அந்த தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. உத்தரபிரதேசத்தில் 70 மாவட்டங்களுக்கு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அளவிலான தேர்தல் நடைபெறவில்லை. அதேபோல், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் புதிய மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. இதனை முடித்துவிட்டு தேசிய தலைவருக்கான தேர்தலை பாஜ நடத்தும் என்று கூறப்படுகிறது. இந்த தேர்தல் தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தேசிய தலைவராக இருந்து ஒன்றிய அமைச்சரானதால் நட்டாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது ஒன்றிய அமைச்சர்களாக இருக்கும் 3 பேர் இந்த பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தர்மேந்திர பிரதான், சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மனோகர் லால் கட்டார் ஆகியோரில் ஒருவர் தேசிய தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒடிசாவைச் சேர்ந்த முக்கிய ஓபிசி தலைவரான தர்மேந்திர பிரதான், கட்சி பணிகளில் அதிக ஈடுபாடு உடையவர். மேலும், தற்போதைய தேசிய தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருபவர். இந்த பதவிக்கான போட்டியில் இவர் முன்னிலையில் உள்ளார்.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த ரேசில் உள்ளார். கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்த்தவர் என்ற பெருமையை கொண்டவர். மூத்த தலைவராகவும் இருந்து வருகிறார். அதேபோல், அரியானா முதல்வராக இருந்து ஒன்றிய அமைச்சரவைக்கு மாறிய மனோகர் லால் கட்டாரும் இந்த பதவிக்கான போட்டியில் உள்ளார். இந்த 3 ஒன்றிய அமைச்சர்களில் ஒருவர் தேசிய தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளது. மேலும், 2029 மக்களவை தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேசிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
The post ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் பாஜ தலைவர் பதவிக்கு 3 ஒன்றிய அமைச்சர்கள் போட்டி? appeared first on Dinakaran.