ராமதாஸ், அன்புமணி பிரச்னை பின்னணியில் பாஜ உள்ளதா?நயினார் பரபரப்பு பேட்டி

நெல்லை: ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான பிரச்னையின் பின்னணியில் பாஜ உள்ளதா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்து உள்ளார்.  நெல்லையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: நெல்லையப்பர் கோயிலுக்கு வெள்ளித் தேர் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக பக்தர்கள் சார்பில் 175 கிலோ வெள்ளி வழங்கப்பட்டு தேர் திருப்பணிகள் நடந்து வருகின்றன.

நானும், தேர் திருப்பணிக்கு ஒரு கிலோ வெள்ளியை அறங்காவலர் குழு தலைவர் செல்லையாவிடம் வழங்கி உள்ளேன். நெல்லையப்பர் கோயிலில் தற்போது யானை இல்லை. உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 யானை குட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை வாங்க ஒன்றிய, மாநில அரசு விதிகளுக்கு உட்பட்டு பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒன்றிணைய வேண்டும். பாஜ கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும்.

அன்புமணி, ராமதாஸ் இருவருக்கும் இடையே உள்ள பிரச்னையின் பின்னணியில் பாஜ இல்லை. பாஜ, அதிமுக கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவன் எண்ணமாக உள்ளது. அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ஒரே மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும். ஆதார் திட்டம் கொண்டுவந்தபோது அதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.

அதுபோலவே தங்கநகை கடன் பெறும் திட்டத்திற்கு வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள், சிக்கல்கள் இல்லாமல் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படும். என்ஆர்சி சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. அண்டை நாடுகளில் இருந்து மேற்குவங்கம் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்..

The post ராமதாஸ், அன்புமணி பிரச்னை பின்னணியில் பாஜ உள்ளதா?நயினார் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: