103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திறப்பு எனது உடலில் பாய்வது ரத்தமல்ல, குங்குமம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி ஆவேச பேச்சு

பிகானேர்: ‘‘எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, குங்குமம் (சிந்தூர்) ஓடுகிறது’’ என பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார். நாடு முழுவதும் 18 மாநிலங்களில் 86 மாவட்டங்களில் 103 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ரூ.1,100 கோடியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அலங்கார நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வழிகள், வாகன நிறுத்துமிடம், மின்தூக்கிகள், பயணிகள் காத்திருக்கும் அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த 103 ரயில் நிலையங்கள் திறப்பு விழா ராஜஸ்தானின் பிகானேரில் நேற்று நடந்தது. இதற்காக ராஜஸ்தான் சென்ற பிரதமர் மோடி, பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் பிகானேரில் உள்ள நல் விமானப்படை தளத்திற்கு சென்றார். பின்னர், கர்ணி மாதா கோவிலில் பிரார்த்தனை செய்த மோடி, தேஷ்னோக் நிலையத்திலிருந்து பிகானேர்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ரூ.26,000 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, தேஷ்னோக் ரயில் நிலையம் உட்பட நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். முன்னதாக, பலானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஆவேசமாக உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:

சிந்தூர் (குங்குமம்) துப்பாக்கி பொடிகளாக மாறும் போது என்ன நடக்கும் என்பதை உலகமும் நாட்டின் எதிரிகளும் பார்த்திருக்கிறார்கள். சிந்தூரை அழிக்க முயன்றவர்கள் தூசியாகிவிட்டனர். எனது நாடி நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது. இந்தியா தீவிரவாத தாக்குதலை எதிர்கொண்டால், அதற்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்பதை இந்த தேசம் உணர்த்தியிருக்கிறது. தாக்குதலுக்கான நேரம் மற்றும் வழிமுறைகளை நமது ஆயுதப் படைகள் தீர்மானிக்கும்.

அணு ஆயுதத்தால் இந்தியாவை அச்சுறுத்த முடியாது. தீவிரவாதிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா பிரித்து பார்க்காது என்பதை தெளிவாக காட்டியிருக்கிறோம். எனது அரசு முப்படைகளுக்கும் சுதந்திரம் அளித்தது. அவர்கள் ஒன்றாக ஒரு பொறியை உருவாக்கியதால் பாகிஸ்தான் மண்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பிகானேரில் உள்ள நல் விமானப் படைத் தளத்தை தாக்க பாகிஸ்தான் குறிவைத்தது.

ஆனால் அவர்களால் எந்த சேதத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அதுவே, பாகிஸ்தானின் ரஹிம்யார் கான் விமான படைத்தளம் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று யாருக்கும் தெரியாத அளவுக்கு நாம் தாக்கி அழித்துள்ளோம். இப்போது அது ஐசியூவில் உள்ளது. வெறும் 22 நிமிடத்தில் தீவிரவாதிகளின் முகாம்களை நாம் அழித்துள்ளோம். இந்தியாவுக்கு எதிரான நேரடிப் போரில் பாகிஸ்தானால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.

நேரடி தாக்குதல் நடக்கும் போதெல்லாம், பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால்தான் பாகிஸ்தான் தீவிரவாதத்தை இந்தியாவுக்கு எதிராகப் போராட ஒரு ஆயுதமாக மாற்றியுள்ளது. இனியும் பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது. எந்த வர்த்தகமும் இருக்காது. அவர்களுடன் பேசுவது என்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நவீனமயமாகும் ரயில்வே

பிகானேரில் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களை நவீனமயமாக்குவதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளர்ச்சித் திட்டங்களுக்கு நாடு முன்பை விட பல மடங்கு அதிக நிதியை செலவிடுகிறது.

ரயில் நெட்வொர்க்கும், உள்கட்டமைப்பும் தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இது நாட்டின் புதிய வேகத்தையும் முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது. வந்தே பாரத் ரயில் சேவைகள் கிட்டத்தட்ட 70 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இது தொலைதூரப் பகுதிகளுக்கு ரயில் சேவையை கொண்டு சேர்த்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சாலை மேம்பாலங்கள், கீழ்ப் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் புதுப்பொலிவை பெற்றுள்ளன. இந்த ரயில் நிலையங்களில் முன்பு இருந்த நிலைமை என்ன, இப்போது எப்படி மாறிவிட்டது என்பதை மக்கள் சமூக ஊடகங்களில் பார்க்கிறார்கள். அம்ரித் பாரத் ரயில் நிலையங்களில் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் தெளிவாகத் தெரியும். அவை உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்தின் சின்னங்களாகவும் உள்ளன. ஒவ்வொரு அம்ரித் பாரத் நிலையத்திலும், இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தை காண்பீர்கள்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 1,300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் போது பல நன்மைகள் கிடைக்கின்றன. விவசாயிகளின் விவசாய விளைபொருள்கள் குறைந்த விலையில் சந்தையை அடைகின்றன. வீணாக்குவது குறைக்கப்படுகிறது. புதிய தொழில்கள் அமைக்கப்படுகின்றன. சுற்றுலா அதிகரிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

The post 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திறப்பு எனது உடலில் பாய்வது ரத்தமல்ல, குங்குமம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி ஆவேச பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: