புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை அமெரிக்கா தான் நிறுத்தியது என்று அதிபர் டிரம்ப் கூறி வரும் நிலையில், 2 நாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தப்பட்டது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். வர்த்தக நடவடிக்கைகளை சுட்டி காட்டி இரு நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்ததாக அவர் கூறினார். இந்த நிலையில், நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி நாடுகளில் சுற்றுபயணம் செய்து வரும் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நெதர்லாந்து தொலைக்காட்சிக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘பஹல்காமில் நடந்ததை போல் இனி தீவிரவாத தாக்குதல் நடந்தால் அதற்கு பதிலடி கொடுக்கப்படும்.
அதனால் தான் ஆபரேஷன் சிந்தூர் கொள்கைகள் இன்னும் முடிவடையவில்லை. ராணுவ நடவடிக்கைகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிய போது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பிரதமர் மோடியிடம் பேசினார்.பாகிஸ்தானுடனும் அவர்கள் பேசினர். பல்வேறு நாடுகளும் பேசின. அவர்களிடம் சண்டையை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நினைத்தால் அதை நேரடியாக எங்களிடம் சொல்ல வேண்டும் என்று கூறினோம். இதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தளபதி நம் நாட்டு ராணுவ தளபதியை தொடர்பு கொண்டு பேசினார்.பிறகு சண்டை நிறுத்தம் ஏற்பட்டது’’ என்றார்.
The post இந்தியா- பாக். சண்டை நிறுத்தம் எப்படி ஏற்பட்டது? வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதில் appeared first on Dinakaran.