பெரம்பலூர் அருகே மரத்தில் கார் மோதி சென்னை டாக்டர், மகள், மாமனார் பலி: மனைவி படுகாயம்

பாடாலூர்: கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா சூரங்குடி தெற்கு கிரிவளை கிராமத்தை சேர்ந்தவர் பாலபிரபு (28). சித்தா டாக்டர். இவரது மனைவி கவுரி (27). இவரும் சித்தா டாக்டர். கணவன், மனைவி 2 பேரும் சென்னை தாம்பரத்தில் கிளினிக் வைத்துள்ளனர். இவர்களது மகள் கவிகா (2). கவுரியின் தந்தை திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா இச்சிப்பட்டி அடுத்த பூசாரி தோட்டத்தை சேர்ந்த கந்தசாமி (50). பாலபிரபு குடும்பத்துடன் சென்னை தாம்பரம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், பாலபிரபு, தனது மனைவி, குழந்தை மற்றும் மாமனாருடன் கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை பாலபிரபு ஓட்டினார்.

நேற்று காலை 7.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே, பெருமாள்பாளையம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் குழந்தை கவிகா, பாலபிரபு, அவரது மாமனார் கந்தசாமி ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண் டாக்டர் கவுரி படுகாயமடைந்தார். இவர்களுடன் அழைத்து செல்லப்பட்ட நாய் குட்டிக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பெரம்பலூர் அருகே மரத்தில் கார் மோதி சென்னை டாக்டர், மகள், மாமனார் பலி: மனைவி படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: