திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நிகழும் எல்லைகளில் பாதுகாப்பு பணி என்ன செய்யலாம்

பெரம்பலூர், மே 21: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி – சென்னை, (சென்னை – திருச்சி) தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நிகழும் பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட எஸ்பி ஆதர்ஸ் பசேரா முன்னிலையில் நேற்று (20ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து அதிகம் நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து, அந்த இடங்களில் விபத்துகளை முற்றிலும் குறைப்பதற்குத் தேவையான திட்டப் பணிகளான நில எடுப்பு, உயர் அழுத்த மின் கோபுரங்களை மாற்றி அமைப்பது மற்றும் வனத் துறையின் அனுமதி பெறுவது மற்றும் இதர பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்டக் கலெக்டர் தலைமையில், மாவட்ட எஸ்பி முன்னிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர், தேசிய நெடுஞ் சாலை டிராபிக் இன்ஸ்பெக்டர், மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்களுடனான கூட்டாய்வு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நிகழும் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களான திருச்சி – சென்னை, தேசிய நெடுஞ் சாலையில் உள்ள பெரம்பலூர் 4 ரோடு மேம்பாலம் ஆரம்பமாகும் பகுதியில் மாவட்டக் கலெக்டர் பார்வையிட்டு அப்பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றவும், சாலையை அகலப் படுத்திடவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, செங்குணம் பிரிவு சாலை, எளம்பலூர் ரோவர் கல்லூரி அருகிலுள்ள இணைப்பு சாலை, வல்லா புரம் இணைப்பு சாலை பகுதி, மங்களமேடு காவல் நிலைய இணைப்பு சாலை, எறையூர் சர்க்கரை ஆலை இணைப்பு சாலை பகுதி, திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள இணைப்பு சாலை, கல்பாடி பிரிவு இணைப்பு சாலை, சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி பிரிவு இணைப்பு சாலை ஆகிய இடங்களைப் பார்வையிட்ட மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ்,

இப்பகுதிகளில் விபத்துகளை தவிர்ப்பதற்கான தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் அணுகு சாலைகளில் வேகத்தடை அமைப்பது, சாலையில் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்றுதல், புதிய அணுகுசாலை மற்றும் சாலை அகலப்படுத்துதல், விபத்து எச்சரிக்கைக்காக சாலை ஒளிர்மின் விளக்குகள் அமைப்பது, கூடுதலாக புதிய உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அலுவலர்களுக்கும், தொடர்புடைய அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். தேசிய நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி செயல்படக் கூடிய கடைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்துறையினர் கண்டறிந்து, முறையாக நோட்டிஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் முற்றிலும் விபத்து ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறையினருக்கு மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் திட்ட இயக்குநர் பிரவீன் குமார், திருச்சி தேசிய நெடுஞ் சாலை பணிகள் ஆலோசகர் வேணுகோபால் ராவ், வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவ, திருச்சி தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர் சத்தியமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கலைவாணி, தேசிய நெடுஞ்சாலைத் துறை இன்ஜ்பெக்டர் கிள்ளிவளவன் மற்றும் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை தாசில்தார்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நிகழும் எல்லைகளில் பாதுகாப்பு பணி என்ன செய்யலாம் appeared first on Dinakaran.

Related Stories: