சிவகங்கையில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சிவகங்கை கல் குவாரியில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்த மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், மல்லாக்கோட்டை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் இன்று (20.5.2025) காலை எதிர்பாராதவிதமாக பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் கல் குவாரியில் பணி செய்துகொண்டிருந்த முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேரந்த ஹர்ஷித் ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, கூட்டுறவுத் துறை அமைச்சரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவும் அறிவுத்தினேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 இலட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 இலட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

The post சிவகங்கையில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: