சென்னை: வணிகவரி துறையில் ரூ.2.02 கோடி செலவில் 23 புதிய வாகனங்களை அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கில் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். இதில் பேசிய அமைச்சர் மூர்த்தி, கடந்த நிதி ஆண்டில் வரி வருவாய் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக செயல்பட்ட ஆணையர் மற்றும் அனைத்து உயர் அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டிலும் அதே முனைப்புடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு அரசு நிர்ணயித்துள்ள வருவாய் இலக்கினை அடைவதற்கு அனைத்து இணை ஆணையர்களும் சிறந்த முறையில் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். முன்னதாக அமைச்சர் மூர்த்தி, வணிகவரி துறையில் ரூ.2.02 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்ட 23 வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன், இணை ஆணையர் பூங்கொடி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
The post வணிகவரி துறை அதிகாரிகள் பயன்பாட்டிற்கு ரூ.2.02 கோடியில் 23 புதிய வாகனங்கள்: அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.