அரியலூர், மே 19: அரியலூரிலுள்ள ஏஐடியூசி அலுவலகத்தில், அனைத்து தொழிற் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்பு திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். ஒப்பந்தம், தினக்கூலி, வெளிச்சந்தை முறை பயிற்சியாளர் போன்ற நடமுறைகளை கைவிட வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தப்பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஜூலை 9ம் தேதி நடத்துவது என்றும், அதற்கு முன்னதாக மே 20ம் தேதி ஆர்ப்பாட்டமும், ஜூலை 2ல் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் தெருமுனை பிரசாரமும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலர் தண்டபாணி, தொமுச மாவட்ட செயலர் மகேந்திரன், சிஐடியூ மாவட்ட செயலர் துரைசாமி, ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்து பேசினர். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post அரியலூரில் தொழிற்சங்க ஆலோசனைக்கூட்டம் appeared first on Dinakaran.