சேந்தமங்கலம், மே 19: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் பாச்சல் ஊராட்சி கடந்தம்பட்டி கிராமத்தில் அங்காளம்மன் கோயில் உள்ளது.கோயிலை நிர்வாகம் செய்வதிலும், கோயில் மாடுகளுக்கு உணவு கொடுத்து பராமரிப்பது குறித்தும், இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கோயிலுக்கு உபயதாரர் ஒருவர் இரும்பு பீரோ ஒன்று வழங்கி உள்ளார். அதனை தற்போது நிர்வாகம் செய்து வருபவரிடம் வழங்காமல், எதிர் தரப்பினரிடம் வழங்கியதாக தெரிகிறது. இதனால் நேற்று முன்தினம் மாலை இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதால், இது குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று, இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
இதுகுறித்து நாமக்கல் ஆர்டிஓ சாந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்று இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படாததால், இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோயிலை அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர பரிந்துரை செய்தார். கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் செல்லும் வரை, கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிட்டார். இதையடுத்து, கோயிலில் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை கோயில் முன் மீண்டும் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், நாமக்கல் தாசில்தார் மோகன்ராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் சென்று விசாரித்தனர். தொடர்ந்து கோயிலுக்கு பூட்டு போட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post அங்காளம்மன் கோயிலுக்கு அதிகாரிகள் பூட்டு appeared first on Dinakaran.