ஊத்தங்கரை, மே 19: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவுசார் மைய பணிகள் முடிந்து 4 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த மையம், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 4 மாதங்களுக்கு முன்பு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், இந்த மையத்திற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கப்பட்டவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊத்தங்கரை பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, அறிவுசார் மையத்திற்கான கட்டடப் பணிகள் நிறைவடைந்து விட்டது.
புத்தகங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிவடைந்து, தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். ஊத்தங்கரையில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தை விரைந்து திறந்து வைத்து, அப்பகுதி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கல்வி மற்றும் அறிவு சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் அறிவுசார் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
The post அறிவுசார் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை appeared first on Dinakaran.