கோவை, மே 19: கோவை மாநகரில் மது பாட்டில் பதுக்கி விற்ற 9 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 913 பாட்டில், ரூ.1.09 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.கோவை மாநகர போலீசார் மாநகரில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து சென்று கஞ்சா, போதை மாத்திரை போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து, போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் மாநகரில் கஞ்சா, போதை மாத்திரை போன்ற போதை பொருட்களை புழக்கம் குறைந்து வருகிறது. அதேபோல மது பாட்டில்களை மறைத்து வைத்து கள்ள சந்தையில் விற்பவர்களையும் போலீசார் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி ஆர்எஸ் புரம் போலீசார் அவர்களுக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது லாலி ரோட்டில் அடுத்தடுத்து உள்ள 2 டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மது பாட்டில் விற்ற சென்னையை சேர்ந்த கணேசன் (44) மற்றும் ஆர்எஸ் புரத்தை சேர்ந்த ஹரிஹர நரசிம்மன் (44) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலீசார் 169 மது பாட்டில் மற்றும் ரூ.12 ஆயிரத்து 980ஐ பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஜேம்ஸ் பீட்டர் என்பவரை தேடி வருகின்றனர்.
லாலி ரோட்டில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடை அருகே மது விற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் (28), முனிஸ்வரன் (26) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 159 மது பாட்டில் ரூ.8240 பறிமுதல் செய்யப்பட்டது. வெரைட்டி ஹால் போலீசார் மது பாட்டில் பதுக்கி விற்ற கோவையை சேர்ந்த துரைராஜ் (26), சிவகங்கையை சேர்ந்த கருப்பையா (49), புதுக்கோட்டையை சேர்ந்த விஜய் (26) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 159 மது பாட்டில் ரூ.10 ஆயிரத்து 225 பறிமுதல் செய்யப்பட்டது.
மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சாய்பாபா காலனி பகுதியில் சோதனை மேற்கொண்டு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது விற்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 356 மது பாட்டில் மற்றும் ரூ.64 ஆயிரத்து 80 பறிமுதல் செய்தனர். குனியமுத்தூர் பகுதியில் ஆறுமுகம் (44) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 70 மது பாட்டில் ரூ.13 ஆயிரத்து 560ஐ பறிமுதல் செய்தனர். கோவை மாநகரில் போலீசார் பதுக்கி வைத்து மது விற்ற 9 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 913 மது பாட்டில் ரூ. 1 லட்சத்து 9 ஆயிரத்து 85 ஐ பறிமுதல் செய்தனர். கள்ளதனமாக மது பாட்டில் விற்றால் கடமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
The post கோவை மாநகரில் மது பாட்டில் பதுக்கி விற்ற 9 பேர் கைது appeared first on Dinakaran.