ஈரோடு, மே 19: நாளை நடைபெறவிருந்த பொது வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டு, அதற்கு பதிலாக மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத, தேச விரோத, தொழிலாளர் விரோத போக்குகளை கண்டித்தும், 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாளை (20ம் தேதி) அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புகள் அறிவித்திருந்தன. இந்த நிலையில், நாட்டில் நிலவி வரும் போர் உள்ளிட்ட அசாதாரண சூழல் காரணமாக நாளை (20ம் தேதி) நடைபெறவிருந்த அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்போராட்டம் எதிர் வரும் 9-7-2025ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், நாளை ரத்து செய்யப்பட்ட போராட்டம், மாலை நேர ஆர்ப்பாட்டமாக மாவட்டத் தலை நகரங்களில் நடைபெறும் என்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாளை நடைபெறவிருந்த தொழிற்சங்க வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.